சறுக்கி விளையாடியே சாதனைகள் புரியும் 9ம் வகுப்பு மாணவி


எதிர்பாராத விதமாக ஒருவருக்கு துன்பம் நேரும் நேரத்தில், ‘யானைக்கும் அடிசறுக்கும்’ என்பார்கள். ஆனால், சறுக்கி விளையாடியே பல சாதனைகள் பல புரிந்து வருகிறார் கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிநயா ரகுபதி. ஸ்கேட்டிங் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இவர், மாவட்டம் தொடங்கி தேசிய அளவிலான போட்டிகள் வரை பங்கேற்று சாம்பியன்  பட்டம் பெற்றவர். ஒட்டு மொத்தமாக தூக்கி நிற்க முடியாத அளவிற்கு பதக்கங்களை வென்றுள்ள அபிநயா, இவ்வளவு தான் நான் பெற்றவை என்று அசால்டாக அடிக்கிறார்.

எனது சம்பளம் அன்றாட செலவுகளை கவனிக்கவே போதுமானதாக இருக்கிறது என்கிற அபிநயாவின் தந்தை ரகுபதி ஒரு தொழிலாளி. தாய் ரேணுகா இல்லத்தரசி, 3ம் வகுப்பு படிக்கும் தம்பி சர்வேஷ் என்று ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் இந்த சாதனை மாணவி.



இது குறித்து அபிநயா கூறியதாவது :-

சிறுவயது முதலே ஸ்கேட்டிங் மீது எனக்கு தீராத ஆர்வம். எனது 10 வயதில் கொடீசியா மைதானம் அருகே சிலர் ஸ்கேட்டிங் விளையாடி பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அதனை பார்த்து என் அப்பாவிடம் ஸ்கேட்டிங் உபகரணங்கள் வாங்கி தர சொல்லி அடம்பிடித்து அழுதேன். ஆனால், அன்று என் அப்பாவும், அம்மாவும் அதனை வாங்கித்தர மறுத்துவிட்டனர். என் அழுகையை பார்த்த எனது மாமா தான் எனக்கு முதன் முதலாக ஸ்கேட்டிங் உபகரணங்கள் வாங்கி கொடுத்தார்.



ஐந்தாம் வகுப்பிலிருந்து

அந்த நேரத்தில் தான் நான் படித்துகொண்டிருந்த பள்ளியில் இருந்து நேஷனல் மாடல் பள்ளிக்கு என்னை மாற்றி சேர்த்தார்கள். அங்கு ஸ்கேட்டிங் விளையாட்டை கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இருந்தனர். தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பில் இருந்து ஸ்கேட்டிங் விளையாட்டை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பலமுறை கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. ஒருமுறை கையும் உடைந்தது.  ஆனாலும், பயிற்சியில் ஆர்வம் குறையவில்லை. பிறகு, முதன் முதலாக மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி சாம்பியன் பட்டம் வென்றேன். அப்போது தான் பெற்றோருக்கு என் மீது நம்பிக்கை வந்தது. அன்று தொடங்கி இன்று வரை என்னை விளையாட வைத்து அழகு பார்க்கும் அவர்களின் தியாகத்திற்கு பஞ்சமில்லை. அப்பாவிடம் பணம் இல்லாத போதும் பல ஊர்களுக்கு என்னை போட்டிகளுக்கு அனுப்புவார். இதை மனதில் கொண்டே விளையாடி தமிழக அளவிலும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றேன் பதக்கங்களை பெற்றேன். கடந்த ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றேன்.



பயிற்சி

தினமும் காலை, மாலை என 5 முதல் 7 மணி நேரம் வரை கோவை வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் ஸ்கேட்டிங் விளையாடி பயிற்சி பெற்று வந்தேன். அந்த விளையாட்டு மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருவதால் தற்போது பயிற்சி தடை பட்டு உள்ளது. எனது, ஆசைகள் அனைத்தும், இந்தியாவிற்காக ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே. அதற்காக தற்போது முதலே கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

சேவைகளும் பிடிக்கும்

நாம் அனைவரும் மனிதர்கள், பிறர் கஷ்டப்படும்போது நாம் உதவ வேண்டும். அதனால், வறுமையில் இருப்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பலரிடம் நிதி திரட்டி அன்றைய போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுவிடம் கொடுத்தேன். தொடர்ந்து, தானே புயல் ஏற்பட போதும், கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோதும் பலரிடம் நிதி உதவிகள் மற்றும் பொருட்கள் பெற்று சென்னையில் இருக்கும் மக்களுக்கு அனுப்பினேன். அனைவருக்கும் உதவ வேண்டும் என்பது எனது கொள்கை. இன்று நன்றாக இருக்கும் யாருக்கும் துன்பநிலை வரலாம் என அறிந்து பிறருக்கு உதவி வருகிறேன்.



ஊக்கம்

நாம் என்னதான் சிறப்பாக விளையாடினாலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. என் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிலர் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார்கள். ஆனால், அயல்நாடுகளுக்கு செல்ல பெரிய தொகை தேவைப்படுகிறது. குடும்ப சூழலை அறிந்து நானும் இது குறித்து வீட்டில் பேசுவதில்லை. அரசு ஊக்கத்தொகை வழங்கினால் தொடந்து விளையாடி என்னால் பல சாதனைகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சின்-தடிக் தளம் வேண்டும்

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் சின்-தட்டிக் தளங்கள் தான் இருக்கும். கோவையில் ஒரு சில இடங்களில் தான் இந்த வகை தளங்கள் உள்ளது. அதில் அதிக கட்டணம் கட்டி தான் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். மற்ற இடங்களில் சிமென்ட் தளங்கள் தான் உள்ளது. இங்கு சிமென்ட் தளங்களில் பயிற்சி பெரும் என் போன்றவர்கள், வெளியூர்களுக்கு செல்லும் போது சின்-தடிக் தளங்களில் தான் விளையாட வேண்டி உள்ளது. மாறுபட்ட தளங்களில் விளையாடும்போது வெற்றி வாய்ப்பை பலர் இழக்கும் சூழல் ஏற்படுகிறது.

தற்போது வ.உ.சி. மைதானத்தில் அந்த தளம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஆனால், நீண்ட நாட்களாக நடக்கும் அந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த விளையாட்டு மைதானத்தை தயார் செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வரும் காலத்தில் சாதனை புரிய தற்போது முதலே தனது தம்பி சர்வேஷை தயார் செய்து வருகிறார் இந்த சாதனை மாணவி.

இந்தியா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெறவில்லை என்று துடிக்கும் நமக்கு, மிக அருகேயே ஒரு வருங்கால சர்வதேச வீரர், வீராங்கனைகள் இருப்பது தெரிவதில்லை. பணம் என்ற ஒற்றை வார்த்தையால், தகுதியும் திறமையும் இருந்தும் நம்மவர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் அபிநயா போன்ற திறமைசாலிகளை ஊக்குவித்து, அவர்களுக்கான உதவிகளை செய்யும்போது நாளைய ஒலிம்பிக்ஸில் நம் கொடிபறக்கும்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...