பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ராமகிருஷ்ணா பள்ளி அணி அரையிறுதிக்கு தகுதி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

டி.எஸ்.எஸ். & கோ டிராபிக்கான (16 வயதுக்குட்பட்டோர்) பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். பள்ளியும், சி.எஸ். அகாடமி இன்டெர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், ராமகிருஷ்ணா அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சி.பி. யேந்தல் (135), எஸ்.ஹர்ஜித் (113) சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 25 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சி.எஸ். அகாடமி இன்டெர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், 16 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெறும் 24 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

மற்றொரு போட்டியில், ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயா பள்ளி, கீர்த்திமான் மெட்ரிக்குலேசன் உயர்நிலை பள்ளியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட் செய்த ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த கீர்த்திமான் எம்.எச்.எஸ்.எஸ். 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

மேலும் காலிறுதிப் போட்டியில் ஆனைமலை அரசு உயர்நிலைப் பள்ளி வெறும் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்கு நோக்கி ஆடிய மணி உயர்நிலைப் பள்ளி 5 ஓவர்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

Newsletter