ஐ-லீக் கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

கோவை : ஐ-லீக் கால்பந்து லீக் போட்டியில் நெராகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவை : ஐ-லீக் கால்பந்து லீக் போட்டியில் நெராகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 



வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னை எஃப்சி மற்றும் நெரோகா எஃப்சி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில், சென்னை அணி வீரர்கள் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடினர். இதன் பலனாக அந்த அணியின் ரோபர்ட்டோ 4-வது நிமிடத்திலும், நெஷ்டோர் 14-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். சென்னை அணி கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகளை தவறவிட்டனர். இருப்பினும், முதல் பாதி ஆட்டநேர முடிவில், சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

இதைத்தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டத்தில் பதிலடி கொடுக்க நெரோகா அணி வீரர்கள் கடுமையாகப் போராடினர். 66-வது நிமிடத்தில் அந்த அணியின் சிங்கம் சுபாஷ் சிங் ஒரு கோல் அடித்து, சென்னை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால், மேற்கொண்டு கோல் அடிக்காதவாறு சென்னை அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போட்டியின் முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடர்ச்சியாக 4-வது வெற்றியைப் பதிவு செய்த சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.



“இந்த தொடரின் ஆரம்ப முதலே எங்களது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எங்களது ஆட்டத்திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும். வீரர்களின் கடின உழைப்பே, இந்தத் தொடரில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகுக்கக் காரணமாகும். ஆட்டங்களில் மேற்கொள்ளும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். அணியின் தற்போதைய ஆட்டம் என்னை மகிழ்ச்சியடைய செய்கிறது,” என்கிறார் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ்.

Newsletter