மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி : பி.எஸ்.ஜி. மற்றும் யுனைடெட் கிளப் அணிகள் சாம்பியன்

கோவை : 9-வது மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

கோவை : 9-வது மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. 

ஜுனியர் ஆண், பெண் இருபாலாருக்கும் நடந்த 9-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சுமார் 54 அணிகள் கலந்து கொண்டன. ஜுனியர் பிரிவில் ஆண்களுக்கான இறுதி போட்டியில் பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலைப்பள்ளி அணி 55:49 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்.எல்.எம். பள்ளியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பாரதி மெட்ரிக்குலேசன் பள்ளியும், ஆர்.கே.எஸ். கல்விநிலையம் உயர்நிலைப்பள்ளி முறையே 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடித்தன. 



பெண்கள் பிரிவில் சி.சி.எம்.ஏ. பள்ளியை 58:14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய அல்வெரினா மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி அணி கோப்பையை கைப்பற்றியது. காரமடை எஸ்.வி.ஜி.வி. பள்ளி, மல்லையன் பள்ளி முறையே 3,4-வது இடங்களைப் பிடித்தன. 



இதேபோல, சீனியர் ஆண்கள் பிரிவில் யுனைடெட் கிளப் அணியானது, 68:57 என்ற புள்ளி கணக்கில் ஒய்.எம்.சி.ஏ. அணியை தோற்கடித்து சாம்பியனானது. பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, அல்வெரினா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 59:51 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய கோப்பையை உச்சிமுகர்ந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை கிராஃப்ட்ஸ்மென் ஆட்டோமெஷன் லிமிடெட்டின் இயக்குநர் கவுதம் ராம் வழங்கினார். 

பாரதி மெட்ரிக்குலேசன் பள்ளியைச் சேர்ந்த நிதின் மற்றும் அல்வெரினா மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியின் ஸ்ரீநிதி ஆகியோர் சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டனர். 

Newsletter