பாராலிம்பிக் கனவை நினைவாக்க அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பாரா வாலிபால் வீரர்கள்

கோவை : தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்த கோவை மாற்றுத்திறனாளி வாலிபால் போட்டி வீரர்களின், பாராலிம்பிக் கனவை நினைவாக்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பாரா வாலிபால் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை : தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்த கோவை மாற்றுத்திறனாளி வாலிபால் போட்டி வீரர்களின், பாராலிம்பிக் கனவை நினைவாக்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பாரா வாலிபால் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 



சர்வதேச அளவில் இந்திய பாரா ஒலிம்பிக் தடகள வீரர்கள் பதக்கங்களை வென்றதால், அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர். ஆனால், தேசிய அளவில் பல்வேறு முறை சாதித்து காட்டிய கோவையைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர்கள், இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள் விடாமுயற்சியுடன், சொந்த செலவில் உபகரணங்களை வாங்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், வி. ஆல்பர் பிரேம் குமார் என்கிற விளையாட்டு ஆர்வலர், கடந்த 2015-ம் ஆண்டு கோவை பாரா வாலிபால் சங்கத்தை உருவாக்கினார். இந்த சங்கத்தின் மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக தயாராக்கிவிடப்பட்டுள்ளனர். 



"தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டித் தொடர்களில் முதல் பரிசோ அல்லது 2-வது பரிசோ பிடித்துள்ளோம். ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களின் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுகின்றனர். ஆனால், போதிய அடிப்படை வசதியில்லாமல் பயிற்சி செய்வதற்கும் தற்போது கஷ்டப்பட்டு வருகின்றனர். போதிய உள்கட்டமைப்பு மற்றும், நிதி உதவியில்லாமல் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்," இவ்வாறு கூறுகிறார் பாரா வாலிபால் சங்கத்தின் செயலாளர் டி. பிரின்ஸ்.

மேலும், விளையாட்டு வாழ்க்கையைத் தொடர முடியாத மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி வீரர்களைக் கண்டறிந்து, மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் நிதியுதவியை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஸ்மார்ட்சிட்டியின் திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கில் மாற்றுத் திறனாளி வீரர்கள் பயிற்சிக்காக தனி இடம் ஒதுக்க வேண்டும், போட்டித் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு மாவட்ட அளவிலான விருதுகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினர். 

Newsletter