தோனியின் அபார ஆட்டத்தால் 3-வது போட்டியில் வெற்றி : தொடரை வென்று இந்தியா சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றஇந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில், சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் பெற்றது.

இதைத் தொடர்ந்து, தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டனர் அவர்களுக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர்.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க வீரர் கேரே 5 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இருவரது விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக ஆடி, ஸ்கோரை உயர்த்தினர். எனினும், யுஸ்வேந்திர சாகலின் அபாரமான பந்துவீச்சால், சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் சரிந்தன. 



கவாஜா (34), மார்ஷ் (39), ஹேண்ட்ஸ்கோம்ப் (58) உள்ளிட்ட 6 விக்கெட்டுகளை சாகல் கைப்பற்றி அசத்தினார். ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், 48.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ரோகித் சர்மா 9 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். இதைத் தொடர்ந்து, தவானுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதற்காக, ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்த போது தவானும் (23), 100 ரன்களை கடந்த பிறகு கோலியும் (46) விக்கெட்டை பறிகொடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆட்டத்தைத் தொடர்ந்தது. தோனி ரன் ஏதும் எடுக்காத போது, அவரது கேட்ச்சை மேக்ஸ்வெல் தவறவிட்டார். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் தோனி. இருவரும் இலாவகமான பந்துகளை மட்டுமே பவுண்டரிகளுக்கு விரட்டினர். இதனால், மெல்ல மெல்ல வெற்றி இந்திய அணியின் பக்கம் வந்தது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

முடிவில், கடைசி ஓவரில் 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இந்திய அணி இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது. தோனி 87 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 61 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

மீண்டும் நிரூபித்த தல :







இந்தப் போட்டித் தொடருக்கு முன்னதாக, தோனியிடம் பினிஷிங் திறமை குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்யலாம் என பேச்சுக்கள் அடிபட்டன. 

ஆனால், தோனி விமர்சனம் குறித்து கவலைப்படாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். இதனால், அவர் விளையாடிய இந்த மூன்று போட்டிகளிலும் (சிட்னி 51), (அடிலெய்டு 55*), (மெல்போர்ன் 87*) அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைத்தாலும், இந்தத் தொடரை கைப்பற்றுவதில் பெரும்பங்கு தோனிக்கே உரித்தானது என்பதை அவர் நிரூபித்துள்ளார். 

Newsletter