தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டியில் திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டியில், திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : கோவையில் நடைபெற்ற 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டியில், திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டி நடத்தப்பட்டது. இதில், 11 ஆண்கள் அணி மற்றும் 7 பள்ளிகள் அணி என மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டன. பள்ளி அளவில், பிரீமியர் மற்றும் சாம்பியன்ஷிப் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டியானது, குழு போட்டி (அணிக்கு 9 பேர்), ரெகு (அணிக்கு 3 பேர்) மற்றும் டபுள்ஸ் என பல்வேறு ஆட்டங்கள் நடத்தப்பட்டன. 



குழு போட்டியில் டி.ஏ.சி.டி. கோவையை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது திருநெல்வேலி அணி. அதேவேளையில், இரட்டையர் பீரிமியர் பிரிவுப் போட்டியிலும் திருநெல்வேலி அணி மகுடத்தைச் சூடியது. ஆனால், ரெகு பிரிவில் சென்னை சபக்தக்ரா கிளப் அணியிடம், திருநெல்வேலி அணி தோல்வியடைந்து, 2-வது இடத்தைப் பிடித்தது. 



இதேபோல, பி.எஸ்.ஜி. டெக் மற்றும் டி,ஜே. ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ரெகு மற்றும் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றது. அதேவேளையில், பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் திருநெல்வேலி அணி ரெகு மற்றும் இரட்டையர் பிரிவு போட்டியில் சாம்பியனானது. இதன்மூலம், இத்தொடரின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருநெல்வேலி அணி கைப்பற்றியது. சென்னை சபக்தக்ரா கிளப் அணி 2.வது இடத்தைப் பிடித்தது. 



சிறந்த இளம் வீரராக பி.எஸ்.ஜி. டெக் மற்றும் டி,ஜே. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் அஜய் ஆதவனும், திருநெல்வேலி அணியின் ஈபென் ரூபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த ஸ்டிரைக்கருக்கான விருதை திருநெல்வேலி அணியின் ஜீவி துரை விக்னேஷ் பெற்றுக் கொண்டார். சென்னை அணியின் பனி விக்னேஷ் சிறந்த டேகோங் விருதும், சென்னையின் இளங்கோ, திருநெல்வேலியின் முகேஷ் துரை ஆகியோர் சிறந்த ஃபீடர் விருதையும் பெற்றனர். பள்ளி அளவிலான போட்டிகளில் சிறந்த இளம் வீரராக கார்த்திக் சபக்தக்ரா அகாடமியின் ஆதித்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரர்களுக்கான பரிசுகளை சிறப்பு விருந்தினர் பி.எஸ்.ஜி. சர்வாஜனா உயர்நிலைப் பள்ளியின் செயலாளர் பி. நாராயணசாமி வழங்கினார். 

Newsletter