தேசிய இளம் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனைக்கு தங்கம்

கோவை : ராய்ப்பூரில் நடைபெற்ற 16-வது தேசிய இளம் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை சி. விஸ்ருதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை : ராய்ப்பூரில் நடைபெற்ற 16-வது தேசிய இளம் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை சி. விஸ்ருதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஸ்வாமி விவேகானந்தா மைதானத்தில் 16-வது தேசிய இளம் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், கோவை ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பயிற்சியாளர் வைரவநாதனிடம் பயிற்சி பெற்ற சி.விஸ்ருதா என்ற வீராங்கனை 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். அதில், 1.01(81) நிமிடங்களில் இலக்கை கடந்து அவர் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் கடந்த ஆண்டு இதே போட்டியில், 1.21.(51) நிமிடங்களில் இலக்கை கடந்து சாதனை படைத்திருந்த விஷ்ணு பிரியா என்பவரின் சாதனையையும் சி. விஸ்ருதா முறியடித்தார்.



மேலும், இந்த சாதனையைப் படைத்ததன் மூலம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஹாங் காங்கில் நடக்கும் ஆசிய அளவிலான இளம் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 

"மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விஸ்ருதா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துள்ளார். இது அவருடைய திறமையை வெளிப்பாடாகும். இந்தத் தொடர் அவருககு சற்று எளிதாக இருந்திருக்கும். ஏனெனில், இதற்கு முன்னதாக, அவர் இதைவிட குறைந்த வினாடிகளில் இலக்கை எட்டியுள்ளார். ஆசிய தடகளப் போட்டியில் விஸ்ருதா வலிமையான போட்டியாளராக திகழ்வார் என நம்புகிறேன்," என்கிறார் அவரது பயிற்சியாளர் வைரவநாதன்.



இது குறித்து விஸ்ருதா கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாட்டிற்காக பதக்கம் வெல்வது எனது கனவு. தற்போதைய போட்டியில் பதக்கம் வென்றிருப்பது மேலும் தன்னை ஊக்கமளித்துள்ளது. மிகவும் கடினமாக உழைத்து ஆசிய இளம் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு," என்றார். 

Newsletter