மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி : தமிழ்நாடு கிரீன் அணி சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கிரீன் அணி மகுடம் சூடியது.

கோவை : கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கிரீன் அணி மகுடம் சூடியது. 

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியை மேம்படுத்தவும், வீரர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் விதமாக, பார்வையற்றோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், ஷாசூம் அறக்கட்டளையுடன் முதன் முறையாக இணைந்து, 'சேலஞ்சர் கோப்பை 2018-19' என்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வனக்கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டி இன்று வரை நடைபெற்றது. 



இந்தத் தொடரில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 42 வீரர்கள் அடங்கிய தமிழ்நாடு ப்ளூ, தமிழ்நாடு ரெட் மற்றும் தமிழ்நாடு கிரீன் ஆகிய 3 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில், பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த தமிழ்நாடு ரெட், தமிழ்நாடு கிரீன் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த தமிழ்நாடு ரெட் அணி, 17 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், இலக்கை நோக்கி ஆடிய தமிழ்நாடு கிரீன் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 



வெற்றி பெற்ற அணிக்கு கோவை வனக்கல்லூரியின் பேராசிரியர் என். விஜய் மற்றும் ஷாசூம் அறக்கட்டளையின் தலைவர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். 

Newsletter