இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து 3 மணி சுழற்றி உலக சாதனை படைத்த கோவை பள்ளி மாணவி!

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி மைதிலி, தீப்பந்தத்துடன் கூடிய இரட்டை சிலம்பத்தை 3 மணி நேரம் தொடர்ந்து சுழற்றி இந்தியா, அமெரிக்கா, யூரோப்பியா என 3 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தீப்பந்தத்துடன் கூடிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து 3 மணி நேரம் சுழற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சின்னவேடம்பட்டி மற்றும் சேரன் மாநகர் பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரிய மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை, வேல்கம்பு, வாள்வீச்சு, வளரி, மான்கொம்பு, சுருள்வாள் மற்றும் வாள்வீச்சு போன்ற பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத்தரப்படுகிறது. இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் உலக சாதனையாளர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.



சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார், சத்யா ஆகியோரின் மகளான மைதிலி இதே பயிற்சி கழகத்தில், பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவி மைதிலி தீப்பந்தந்துடன் கூடிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து 3 மணி நேரம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.



சர்வதேச மகளிர் மற்றும் குழந்தைகள் அறிவியல் தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மைதிலி செய்த இந்த சாதனை, இந்தியா உலக சாதனை, அமெரிக்கன் உலக சாதனை, யூரோப்பியன் உலக சாதனை என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.



சாதனை சிறுமிக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

சாதனை சிறுமி மைதிலிக்கு இந்திய உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான சதாம் ஹீசேன் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முல்லை தற்காப்பு கலை துணை பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter