உடுமலையில் தனியார் பள்ளிக்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

உடுமலையில் உள்ள ஆர்.கே.ஆர்.குருவித்யா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற 3 பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் அணி முதல் பரிசை வென்று சுழற்கோப்பையை தட்டிச்சென்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

உடுமலைப்பேட்டை, ஆர்.கே.ஆர் குருவித்யா மேல்நிலை பள்ளியில் 3 பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி தொடங்கி வைத்தார்.

பள்ளியின் செயலர் கார்த்திக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வந்த் கண்ணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் விவேகானந்தா மேல்நிலை பள்ளி தாளாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், ஆர் கே ஆர் குருவித்யா மேல்நிலை பள்ளி, ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஆர்.கே.ஆர்.ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடின.

இதில் ஆர் கே ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று ஆர்.கே.ஆர். கிரிக்கெட் சுழற்கோப்பை - 2023ஐ வென்றது. இந்த ஆண்டுக்கான தொடர் நாயகனாக ஆர்.கே.ஆர் குருவித்யா மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்தீஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சுழற்கோப்பையை வென்றார்.

வெற்றி பெற்ற ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வந்த் கண்ணன் சுழற்கோப்பையையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி, பள்ளி செயலர் கார்த்திக்குமார், ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் மாலா, பள்ளி தலைமையாசிரியர் கலிலூர் ரஹ்மான் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Newsletter