சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது முன்னேற்றத்தை பாதிக்கும் - தேசிய காவலர் பயிற்சி அகாடமி இயக்குனர் ஏ.எஸ்.ராஜன்

பீளமேடு அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாணவ - மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என ஏ.எஸ்.ராஜன் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு தனியார் கல்லூரியில் மாணவ மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்வில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் கலந்து கொண்டார்.

சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்தும், அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மாணவ மாணவியருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கல்விதுறை, மருத்துவத்துறை போல காவல் துறையும் சேவை மனப்பான்மையுடன் இருக்கும் துறை தான், காவல் அதிகாரிகளாக 20 சதவீதம் வரை பெண்கள் வந்து உள்ளனர்.



தமிழகத்தில் மருத்துவதுறையை போல, காவல் துறையிலும் ஏராளமான பெண்கள் வருகின்றனர். மேலும் காவல் துறையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது, நீதி துறையின் முதல்கட்டமே காவல் துறைதான், இதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

மேலும் பெண்களால் காவல் துறையில் சிறப்பாக செயல்பட முடியும். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் வருவது குறைந்துள்ளது உண்மைதான்.

மருத்துவராக வேண்டும், வெளிநாடு போக வேண்டும் என்ற எண்ணங்களும் ஒரு காரணமாக உள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு முயற்சிப்பவர்களிடம் கலந்துரையாடல் குறைந்து விட்டது, புதுமையான சிந்தனைகள் குறைந்து இருக்கின்றது.

கேள்வி முறைகளும் மாறி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களை பற்றி கூட முதலில் தெரியாமல் இருந்தநிலை மாறி இப்போது உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது புதிய பயிற்சிகள் அளிக்கபடுகிறது, தொழில்நுட்ப ரீதியாக கையாள்வது, ஊடகங்களை கையாள்வது, கடலோர மாநிலங்களில். அதிகாரிகளுடன் கலந்துரையாடல், சைபர் கிரைம் தொடர்பான பணிகள் ஆகிய புதிய பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

6 பகுதிகளாக மக்களை பிரித்து எந்த மாதிரியான அதிகாரிகளை மக்கள் விரும்புகின்றனர் என ஆய்வு நடத்தப்படுகின்றது. காவல் துறையில் இருந்தவர்கள், 10 ஆண்டு ஐபிஎஸ் பணிபுரிந்த அதிகாரிகள், பொது மக்கள், மீடியா, நீதித்துறை, என்ஜிஓ என அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துகளின் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி முறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. விடுதலை அடைந்ததில் இருந்து இதுவரை 40 ஆயிரம் போலீசார் உயிரிழந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள், நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதற்காக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பது முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும். எனவே அதனை அறிவை வளர்த்து கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும்

இவ்வாறு ஏ.எஸ்.ராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...