உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான 4 பெண்களில் 3 பேரின் உடல்கள் மீட்பு - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிவாரணம்

உதகை அடுத்த சீகூர் ஆனிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பெண்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சீகூர் வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படும் இக்கோவிலுக்கு கார்த்திகை தீபம் என்பதால் நேற்று திருவிழாவிற்காக கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலை சென்றடைய ஆனிக்கல் ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த கோவிலுக்கு உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், கோவிலை சென்றடைய பக்தர்கள் ஒவ்வொருவராக ஆணிக்கல் ஆற்றை கடந்து சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக, ஆற்றை கடந்த 4 பெண்கள் திடீரென வெள்ளத்தில் சிக்கி மாயமாகினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள், உடனடியாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விசாரணையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் உதகை கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஜெக்கலொரை கிராமத்தை சேர்ந்த சரோஜா(65), வாசுகி(45), விமலா(35) மற்றும் சுசிலா(56) என்பது தெரியவந்தது.



இதனிடையே நேற்று காலை வரை ஆணிக்கல் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீரே ஓடிய நிலையில், மதியத்திற்கு மேல், மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இரவு நேரம் என்பதாலும் ஆற்றில் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடியதாலும் உடல்களை கண்டுபிடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.



இதனையடுத்து இன்று காலை 7 மணி முதல் உதகை, கூடலூரை சேர்ந்த தீயணைப்பு துறையினர் மற்றும் சீகூர் வனத்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து ஆனிக்கல் ஆற்றின் இருபுறமும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.



தீவிர தேடுதலில், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சரோஜா, வாசுகி, விமலா ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் சுசிலா உடலை 7 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் மீட்பு குழுவினர் அவரது உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.



இந்நிலையில்a சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக நிவாரண தொகையாக தலா 4 லட்சம் வீதம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே சீகூர் வனப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்லும் சாலைகள் மோசமாக உள்ளதால் அவற்றை சீரமைத்து தர வேண்டும் என்றும், இறந்த பெண்களின் குடும்பங்கள் ஏழ்மையில் உள்ளதால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட சரோஜா, வாசுகி, விமலா மூன்று பெண்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...