பொள்ளாச்சி அருகே வெளிநாட்டு குதிரைகளை பராமரித்து தருவதாக கூறி ரூ. 2.5 கோடி மோசடி - தந்தை, இரு மகன்கள் கைது

பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த ஹரிவராசன், அவரது அண்ணன் அரவிந்த் கிருஷ்ணன் மற்றும் தந்தை சீனிவாசன் ஆகியோர், வெளிநாட்டு குதிரைகளை பராமரித்து கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.



கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயர் (47). துபாயில் வசித்து வரும் இவர், குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பண்ணை அமைத்து வெளிநாட்டு அரேபிய குதிரைகளை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த ஹரிவராசன் (26) என்பவர் முகநூல் மூலம் ஜெயா நாயரின் கணவரை தொடர்புக் கொண்டு, பொள்ளாச்சி பகுதியில் குதிரைப் பண்ணை வைத்து இருப்பதாகவும், பண்ணைக்கு வெளிநாட்டு குதிரைகளை கொடுத்தால் பராமரித்து விற்பனைக்கு தயார் செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பண்ணையை நடத்த தன்னுடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன் (30) மற்றும் தந்தை சீனிவாசன் (58) ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி, ஜெயா நாயர் மற்றும் அவரது கணவனும், 15 வெளிநாட்டு குதிரைகளை பராமரிக்க, ஹரிவராசனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

ஒப்பந்தத்தின்படி, குதிரைகளை பராமரிக்க தீவனம் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.3 லட்சத்தை ஜெயா நாயர், ஹரிவராசனுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஜெயா நாயரின் பண்ணைக்கு, ஒருவர் குதிரையை விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. அந்த நபர் குறித்து விசாரித்தபோது அது பொள்ளாச்சி ஹரிவராசன் தான் என்பதை ஜெயா நாயர் தெரிந்துக் கொண்டார்.

பராமரிப்பதாக கூறி, தங்களிடம் குதிரைகளை வாங்கி, தங்களது பண்ணைக்கே விற்க வந்து ஹரிவராசன் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் அனுப்பிய பணத்தை குதிரை பராமரிப்புக்கு பயன்படுத்தாமல், மோசடி செய்து இருப்பதுடன், பராமரிக்க கொடுக்கப்பட்ட குதிரைகளை விற்று மொத்தம் ரூ.2½ கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயா நாயர் புகார் அளித்ததன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர், மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஹரிவராசன், அவருடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன், தந்தை சீனிவாசன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் பராமரிப்பில் இருந்த 11 குதிரைகளை மீட்டனர்.

பின்னர், மோசடியில் ஈடுபட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...