கோவையில் காய்கறிகளுடன் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்ட கிராம மக்கள் - நேரில் சென்று எஸ். பி விசாரணை - 4 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் காய்கறிகளுடன் ஊடுபயிராக பயிரிட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர், அங்குள்ள விவசாய நிலங்களில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.



இந்நிலையில், பசுமணி கிராமத்தில், கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் பசுமணி கிராமத்துக்கு சென்று சோதனை செய்தனர்.



அப்போது, காய்கறிகளுடன் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சா செடிகளை பயிரிட்டது செல்லன் (60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயிரிட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.



பின்னர், கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பசுமணி கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



மேலும், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது, விற்பது போன்ற சட்டத்துக்கு விரோதமான செயல்களை செய்வதினால் ஏற்படும் சட்ட விளைவுகளை குறித்தும் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தயங்காது காவல்துறைக்கு - கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட எஸ். பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...