வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.19 லட்சம் மோசடி: கணவர் கைது - மனைவி தலைமறைவு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்த கோவை தம்பதி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கணவர் கைதான நிலையில், தலைமறைவாகியுள்ள மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது33). இங்கிலாந்தில் உள்ள பல்கலைகழகத்தில் இவர், எம்.எஸ்,சி கம்பியூட்டர் நெட்வொர்ங் படித்து முடித்துள்ளார். தற்போது, கோவையில் தங்கி வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சந்திரமோகன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல ஆன்லைன் மூலம் முயற்சித்து வந்துள்ளார்.

அப்போது பேஸ்புக் மூலம் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஷி இமிகிரேசன் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான அருண் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் சந்திரமோகனிடம் போலந்து நாட்டில் வேலை உள்ளதாகவும், அங்குச் செல்ல ரூ.4 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளனர்.

மேலும், முன்பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், பணியாணை வந்த பிறகு மீதமுள்ள பணம் கொடுக்க வேண்டும் எனவும் சந்திரமோகனிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய சந்திரமோகன், இரண்டு தவணைகளாக ரூ.1 லட்சம் பணத்தை அருண் மற்றும் ஹேமலதா தம்பதியிடம் வழங்கியுள்ளார். இதையடுத்து அவர்களிடம் வேலைக்கான பணியாணை குறித்து கேட்டபோது, விரைவில் அழைப்பு வரும் என தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக நேரில் சென்றும் முறையான பதில் கிடைக்காத நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அந்நிறுவனத்திற்கு நேரில் சென்ற சந்திரமோகன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து, சந்திரமோகன் பல்வேறு நபர்களிடம் விசாரித்தபோது, இவரைப்போலவே பலர் வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.

அதன்படி, கும்பகோணத்தை சேர்ந்த அமுதபிரியன் ரூ.1 லட்சம், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் ரூ.4.54 லட்சம், திருவள்ளூர் பொன்னேரியை சேர்ந்த சரவணன் ரூ. 1 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த முகமது ஜவகர் அலி ரூ.4.50 லட்சம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் ரூ.1 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த அகமது யாசர் ரூ.1 லட்சம், நாகர்கோவிலை சேர்ந்த பெஜாட்ச் ரூ.2 லட்சம், அரியலூர் புகழேந்தி மற்றும் கார்த்தீஸ்வரன் ஆகியோர் ரூ. 3.18 லட்சம் என மொத்தம் ரூ. 19.22 லட்சம் பணத்தை பெற்று இந்த தம்பதியினர் மோசடி செய்திருப்பது உறுதியானது.



இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் அருண் மற்றும் ஹேமலதா தம்பதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட அருணை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான அவரது மனைவி ஹேமலதாவை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கோவையைச் சேர்ந்த தம்பதி, சுமார் 20 லட்சம் ரூபாய் வரை பணமோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...