திருப்பூர் திருமுருகன்பூண்டி தனியார் காப்பகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு மூன்று குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்தக் காப்பகத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் காப்பக நிர்வாகி புகார் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே செயல்பட்டு வந்த விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மேலும், 11க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.



இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. காப்பக உரிமையாளர் செந்தில்நாதன் கைது செய்யப்பட்டார். மேலும், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.



இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த காப்பக உரிமையாளர் செந்தில்நாதன் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். இதுகுறித்து பேசிய அவர், மூன்று குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எங்களது காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நானும் சிறையில் அடைக்கப்பட்டேன்.

தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ள சூழலில், கடந்த டிசம்பர் 15ம் தேதி, காப்பகத்தை பார்வையிட வேண்டும் என அதிகாரிகள் கூறியதன் பேரில், அவர்களுடன் காப்பகத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது காப்பகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த டிவி, 10க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு 10 லட்சத்திற்கு மேல் இருக்கும்.

இது தொடர்பாக, அவிநாசி தாசில்தார், அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த திருட்டு தொடர்பாக ஒருவரை பிடித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை திருடப்பட்ட பொருட்கள் எதையும் போலீசார் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, காப்பகத்தின் பின்புறம் உள்ள கேட் உடைக்கப்பட்டு அதன் வழியாக சமூக விரோதிகள் வந்து இந்த திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே, பின்புற கேட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காப்பகத்திற்கு சீல் வைத்த சில நாட்கள் மட்டுமே போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். தற்பொழுது போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதனால், காப்பகத்திற்குள் சமூக விரோதிகள் சுலபமாக வந்து செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் காப்பகத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...