கோவை சிம்ப்ளிசிட்டி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் - திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்!

சிம்ப்ளிசிட்டி செய்தியாளர் லட்சுமணன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம், சம்பந்தப்பட்ட காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.


திருப்பூர்: கோவை சிப்ளிசிட்டி செய்தியாளர் லட்சுமணனை தாக்கிய காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவர் லட்சுமணன். ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய லட்சுமணன், தற்போது சிம்பிளிசிட்டி இணைய ஊடகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் லட்சுமணன், கோவை ஈச்சனாரியில் நடந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நிகழ்விற்கு சென்றிருக்கின்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து ஈச்சனாரியிலிருந்து, கோயமுத்தூர் மார்க்கமாக இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அவர் வரும் வழியில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர் என் ரவி வாகனம் செல்வதால் (கான்வாய்), சாலையில் செல்லும் வாகனங்களை, பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.

அப்போது லட்சுமணன் தன்னுடைய வாகனத்தையும் சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார். ஆளுநர் ஆர்என்.ரவி வாகனம் சென்ற பிறகு, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், பத்திரிகையாளர் லட்சுமணனின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு காவலர் அராபத் அலி, ஒருமையில் பேசியவாறு பத்திரிகையாளர் லட்சுமணனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து சக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காவலர் அராபத் அலி நான் காவல்துறை, உன்னால் என்ன செய்ய முடியும்? முடிந்ததை பார்த்துக்கொள் என்று ஒருமையில் தெரிவித்திருக்கின்றார். பின்னர் பத்திரிகையாளர் லட்சுணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை காவலர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. காவல்துறை உங்கள் நண்பன் என கூறிக்கொண்டு செய்தியாளர் லட்சுமணனை தாக்கிய சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தகாத முறையில் நடந்து கொண்ட காவலர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், கோவையில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

அதேபோன்று, திருப்பூர் பத்திரிகையாளர் சங்க தலைவர் முரளி வெளியிட்ட அறிக்கையில்,

கோவையில் செய்தியாளர் லட்சுமணனை கடும் சொற்களால் வசைபாடி, தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் அராபத் அலி மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை உங்கள் நண்பன் என்ற சொல்லை செயலால் நிறுவி, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரான லட்சுமணனுக்கு காவல் துறை உரிய நீதி பெற்று தர வேண்டும்.

காவலர் அராபத் அலி தனது இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் செய்தியாளர் லட்சுமணனுக்கு உரிய நீதி கிடைக்க திருப்பூர் பத்திரிகையாளர் சங்கம் உறுதுணையாக இருக்கும். மேலும், அனைத்து பத்திரிகைகாளர்களையும் ஒன்றிணைத்து திருப்பூர் பத்திகையாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...