வால்பாறை அருகே 2 வீடுகள், பம்ப்செட்டை உடைத்து சேதப்படுத்திய யானைகள் - மக்கள் அச்சம்..!

வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 2 வீடுகளின் ஜன்னல், கதவுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள் அங்கிருந்த பம்ப்செட் கட்டிடத்தையும் தாக்கி சேதப்படுத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் 2 வீடுகள் மற்றும் பம்ப்செட் கட்டிடத்தை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வால்பாறை அருகேயுள்ள பச்சைமலை எஸ்டேட் பகுதியில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 14 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளன.



இதனிடையே அந்த யானைகள், அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் ராமதாஸ் ஆகியோரது வீடுகளின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.



இந்நிலையில், அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் அருகில் இருந்த குடிநீர் பம்ப்செட் கட்டிடம் மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து முழுமையாக சேதப்படுத்தி உள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள், காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளுக்கு விரட்ட வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...