உடுமலை கிரஷர் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் - போக்குவரத்து பாதிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல், மணல் ஏற்றிச்சென்ற கிரஷர் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக மக்கள் புகார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த துங்காவி சுற்றுவட்டார பகுதிகளில் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றிலிருந்து கற்கள் மற்றும் ஜல்லிகளை கொண்டு செல்வதற்கு அதிக எண்ணிக்கையிலான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், துங்காவி-வேடப்பட்டி சாலையில் மலையாண்டிபட்டினம் பிரிவுக்கு அருகில் கல் மற்றும் ஜல்லிகளை ஏற்றிச்செல்லும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் தாசில்தார் மேற்கொண்ட சமாதான முயற்சிக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த கிரஷரில் கற்களை அரைக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதால் நீண்ட தூரம் வரை புழுதி மண்டலம் ஏற்படுகிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கு பலவிதமான சுவாசப் பிரச்சினைகள், தோல் நோய்கள் போன்றவை ஏற்படுகிறது.

மேலும் தென்னை, வாழை, மல்பெரி போன்ற பயிர்களில் புழுதி படிவதால் மகசூல் பாதிக்கிறது. இதுதவிர, இரவு பகலாக லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும், அதிக எடையுள்ள வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் சாலைகளும் சேதமடைகிறது. எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...