நீலகிரி மசினக்குடியில் 40 ஆண்டுக்குப் பின் பூத்துக் குலுங்கும் மூங்கில் அரிசி

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் மூங்கில் அரிசிகள் பூத்து குலுங்குவதை அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வன வனப்பகுதி முழுவதும் ஏற்கனவே களை செடிகள் ஆக்கிரமித்து வன விலங்குகளுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மூங்கில்கள் அரிசி பூத்து இறந்து வருவதால் கடும் உணவு தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

67% வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனபகுதிகளில் அதிக அளவில் மூங்கில் மரங்கள் உள்ளன. இந்த மூங்கில்கள் காட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இருப்பதால், ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்ந்து வந்து செல்கின்றன.

குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார், மசினகுடி, சீகூர், ஆனைக்கட்டி ஆறுகளின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் உள்ளன.

இந்த மூங்கில்கள் காட்டு யானைகள் மட்டுமின்றி மான்கள், காட்டெருமைகள், குரங்குகளுக்கும் உணவாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக முதுமலையை லண்டானா, எப்பிடோரியம் போன்ற களை செடிகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளபோதும், இந்த மூங்கில்கள் அவற்றுக்கு உணவாக இருந்து வருகின்றன.



40 முதல் 45 ஆண்டுகளை வாழ்நாளாக கொண்டுள்ள இந்த மூங்கில்கள் தற்போது அரிசி பூத்துள்ளன.



ஒவ்வொரு மூங்கிலிலும் கோடிக் கணக்கான மூங்கில் அரிசி பூத்துள்ளன.



இதனால், பச்சை பசுமையாக காட்சி அளித்த மூங்கில்கள் தற்போது வறண்டு போய் இலைகள் இன்றி அரிசிகளை மட்டுமே கொண்டு காய்ந்து பட்டுபோய் வருகின்றன. அரிசி பூத்துள்ள மூங்கில்கள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் உயிரிழந்துவிடும்.

குறிப்பாக, மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மூங்கில் ஒரே நேரத்தில் அரிசி பூத்து இருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருவதுடன் அவை இறப்பதை கண்டு வேதனையும் அடைந்துள்ளனர்.



இந்த மூங்கில் அரிசிக்கு மருத்துவ குணம் இருப்பதாக கூறப்படுவதால், சில ஆதிவாசி மக்கள் அவற்றை சேகரித்து வீடுகளுக்கு எடுத்து செல்கின்றனர். இதனிடையே யானைகளின் முக்கிய உணவான மூங்கில்கள், ஒரே காலத்தில் அதிக அளவில் அழிந்து வருவது வனத்துறையினரை மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் கவலை அடைய செய்துள்ளது.

ஏற்கனவே, வன பகுதியில் உள்ள களை செடிகளால் காட்டுயானைகள் உணவு தேடி விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிக்கும் வரும்போக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான மூங்கில்களும் அழியும் நிலையில் உள்ளதால், இனி வரும் நாட்களில் மனித - காட்டு யானை மோதல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...