கோவை காந்திபுரத்தில் கத்தி முனையில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது!

கோவை காந்திபுரத்தில் உள்ள டாஸ்மாக் பார் சப்ளையர் ராஜ்குமாரிடம், கடை திறப்பதற்கு முன்பே மதுபாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை காந்திபுரம் அருகே டாஸ்மாக் பார் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கையை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை ராஜ்குமார் பாரில் சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், ராஜ்குமாரிடம் மதுபாட்டில் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் கடை திறக்கவில்லை, 12 மணிக்கு பிறகு வந்து வாங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமாரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர் ராஜ்குமார் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பார் ஊழியர் ராஜ்குமாரை தாக்கி பணம் பறித்தது ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த மோசஸ் (28), வ.உ.சி வீதியை சேர்ந்த மெக்கானிக் தீபக் (20) மற்றும் பட்டேல் வீதியை சேர்ந்த பூபதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே கோவையில் உள்ள காவல் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...