கோவை நீலம்பூர் - மதுக்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் - கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்

நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை மாவட்டம் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 28 கிமீ தூரத்திற்கு உள்ள L&T பைபாஸ் இருவழிச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



பாலத்துரை ரோடு ஜங்ஷன் பகுதியில் துவங்கிய இந்த நடைபயணம் நீலாம்பூர் பகுதியில் நிறைவடைந்தது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டார்.



மேலும் இந்த நடைபயணத்தில் அக்கட்சியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், நீலாம்பூர் பகுதியில் இருந்து மதுக்கரை வரை உள்ள பைபாஸ் சாலை பல வருட காலங்களாக இருவழி சாலையாகவே இருப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நீலாம்பூரை அடுத்த சேலம் பகுதியில் ஆறு வழிச்சாலையாகவும் மதுக்கரையை அடுத்த கொச்சின் சாலை ஆறு வழிச்சாலையாகவும் இருக்கின்ற நிலையில் இடைப்பட்ட பகுதியில் உள்ள இந்த சாலை இருவழி சாலையாக இருப்பதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே இடைப்பட்ட இந்த பகுதியும் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் சாலை விபத்துகள் இல்லாமலும் பயணிக்க இயலும்.

1992ல் இந்த சாலை பணிகள் துவங்கப்பட்ட போது அன்றைய நாட்களில் இருவழிச் சாலை போதுமானதாக இருந்தது. தற்பொழுது 30 ஆண்டுகள் ஆன நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதை கருத்தில் கொண்டு இதனை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளேன். பல்வேறு அழுத்தங்கள் கொடுத்த நிலையிலும் இதுவரை ஆறு வழிச்சாலையாக இந்த சாலை மாற்றப்படவில்லை.

இப்பகுதியில் மேம்பாலங்களும் தேவைப்படுகிறது. இந்த சாலை கோவை மாநகரத்தின் புறவழிச்சாலையாக உள்ள நிலையில், புறவழிச் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் புறவழிச்சாலையை பயன்படுத்தாமல் மாநகருக்குள் இருக்கின்ற சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக உடனடியாக மாற்ற வேண்டும். மேலும் இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் 1990களிலேயே முடிந்து விட்டது.

தற்பொழுது இந்த சாலைகளில் விவசாய நிலங்கள் இல்லை. விவசாய போராட்டங்கள் இந்த சாலைக்கு பொருந்தாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...