கோவையில் சிறுவாணி இலக்கிய திருவிழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற சிறுவாணி இலக்கிய திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.



கோவை: கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற சிறுவாணி இலக்கிய திருவிழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் சிறுவாணி இலக்கிய திருவிழா பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் சிறுவாணி இலக்கிய திருவிழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் பொது நூலக இயக்கத்தின் இயக்குனர் இளம் பகவத், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,

இரண்டு நாள் இலக்கிய விழா எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றுள்ளது. திமுகவின் ஆட்சி காலத்தில் பிற துறைகளை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது போல, தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும் இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று இலக்கிய திருவிழாக்களின் மூலம் தான் தாய் மொழியை பாதுகாக்க முடியும்.

நெல்லை, கோவையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது சுவையான நீர் சிறுவாணி நீர் என்பது போல், இப்பகுதியைச் சேர்ந்த மக்களும் இனிமையானவர்கள். இந்தப் பகுதி எப்படி வணிகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றதோ, அதேபோல் இலக்கியத்திற்கும் புகழ்பெற்ற பகுதியாக கொங்கு பகுதி உள்ளது.

இங்கிருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள் உருவாகியுள்ளனர். இங்குதான் கலைஞரின் தலைமையில் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஆண்டுதோறும் இதுபோன்ற இலக்கிய திருவிழா நடத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வர் விருப்பப்படுகிறார். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். இலக்கிய படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, அவர்களது வாழ்வை முன்னேற்றும் வகையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுபோன்று இலக்கிய திருவிழாக்களின் மூலம் எழுத்தாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பெருமை சேர்ப்பது மிக முக்கியமான அம்சமாகும். இலக்கிய படைப்பாளிகள் அவர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அவர்களது இலக்கியப் பணிகளை தொய்வின்றி தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக, அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியான 'கல்லூரிக் கனவு' எனும் நிகழ்ச்சி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...