வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தியை பரப்புவது சீமானும், பாஜகவும் தான்-கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜகவினரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தான் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பி வருகின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


சென்னை: வட மாநில தொழிலாளர்களை குறித்து வதந்தி பரப்புவது பாஜகவினரும் சீமானும் தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.சம்பத்தின் 98ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, ஈ.வெ.கி.சம்பத்தின் பேச்சாற்றல் மற்றும் உழைப்பிற்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதை எனது கருத்து. கல்லூரி காலத்தில் அவர் பேச்சைக் கேட்பதற்காக அலைந்து திரிந்து இருக்கிறேன். அவர் அழுத்தம் திருத்தமாகவும், எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்ற பேச்சாற்றலை உடையவர்.

அவரைப் போலவே பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு ஓரளவுக்கு நான் பேசுவதற்கு காரணம் என்னுடைய குருநாதர் சம்பத் தான். வட மாநில தொழிலாளர்களை குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பாஜக மறைமுகமாகச் செய்கிறார்கள், சீமான் வெளிப்படையாகச் செய்கிறார். இவர்கள் இரண்டு பேர்தான் காரணம்.

சீமான் தன்னுடைய விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும், வட இந்தியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார். வேண்டும் என்றே திட்டமிட்டு இதுபோன்று செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு மாநிலம், ஜாதி, மொழி கிடையாது. அவர்களுக்கு கை உண்டு, கால் உண்டு, வயிறு உண்டு ஒருவேளை சோற்றுக்காக இங்கே உழைக்க வருகிறார்கள். சீமான் பேச்சு அவருக்குத் தண்டனை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது.

சிங்கப்பூர் போன்ற இடங்களில் நம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு எதிராக நடந்தால் நாம் சும்மா இருப்போமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னதுதான் தமிழ் மரபு. எனவே தமிழக அரசு உடனடியாக அம்பு எய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்னைக்கு 10 ஆண்டுகளாக சீமான் தான் காரணம். ரயில்வே மற்றும் வங்கியில் பணி செய்பவர்கள் வேறு, தொழிலாளர்கள் பணி வேறு. 10 வருடங்களாக ஒரு விஷயத்தைப் பேசி வந்தால் அது நியாயமாகுமா?.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...