வடமாநிலத்தவர்கள் குறித்து இணையத்தில் பரவிய வதந்தி - திருப்பூரில் பீகார் மாநில அரசின் குழுவினர் ஆய்வு!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியை தொடர்ந்து, பீகார் மாநில அரசின் குழுவினர் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட பீகார் மாநில அரசின் குழு, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வதந்தி பரப்பப்பட்டது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில அரசு, குழு ஒன்றை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது. இந்த நிலையில் நேற்றைய தினம், சென்னை வந்த பீகார் மாநில குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்திய நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார், சிறப்பு படை பணி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், பீகாரை பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தொழில்துறையினர், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் கூறியதாவது, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தார். பீகார் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினோம். இங்கு பல சங்க பிரதிநிதிகள் உடன் பேசினோம்,

தவறான வீடியோக்களை தமிழகத்தில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் காரணமாக பயம் உண்டானது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் மார்ச் மாதம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்கள்,

கட்டுப்பாட்டு அறை துவங்கியது, ஒலி பெருக்கி மூலம் இந்தியில் அறிவிப்பு வெளியிட்டது, பின்னலாடை நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்டது, மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி.

இந்தியில் தான் இது குறித்து பேசுகிறேன் அதனை ஒளிபரப்பினால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அச்சம் நீங்கும் என தெரிவித்து மேற்கூரிய விஷயத்தை இந்தியில் பேசினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் கூறியதாவது, டிவிட்டர், யூடியூப், பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோக்களை தடை செய்ய வழக்குப்பதிவு செய்து யூ டியூப் மற்றும் டிவிட்டருக்கு பரிந்துரைத்துள்ளோம்.

பணம் சம்பாதிக்க பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளோம். கட்டுப்பாட்டு அறைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் விளக்கம் மட்டுமே கேட்டு வருகின்றனர். புகார் இதுவரை பெறப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...