கோவையில் மார்ச்.12ல் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு - தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் வகையிலும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் கோவையில் கொடிசியா வளாகத்தில் வரும் 12ஆம் தேதி மாவட்ட மாநாடு நடக்க உள்ளதாக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் அறிவித்துள்ளார்.



கோவை: கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 12ஆம் தேதி கொடிசியா வளாகத்தில் மாவட்ட மாநாடு நடக்க உள்ளது.



இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

அப்போது, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் கூறியதாவது:



"கட்டுமான தொழில் மற்றும் மனை தொழில் என்பது நாட்டினுடைய அடிப்படையான கட்டமைப்பை மேற்கொள்ளக்கூடிய மிக முக்கியமான தொழிலாகும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய தொழில். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய இந்த தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த தொழில் சார்ந்த அனைத்து பங்குதாரர்களையும் இணைத்து அரசியல் சார்பற்ற "கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு" என்ற அமைப்பை தொடங்கியுள்ளோம். இது ஒரு தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு.

இந்த தொழிலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் உண்டு. குறிப்பாக இந்த தொழிலில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு (பிளான் அப்ரூவல், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம், ஜி.எஸ்.டி) ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும். ஜி.எஸ்.டி யை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம்.



கடந்த நான்கு ஆண்டுகளுக்குமுன் துவங்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு பிரச்சினைகளை அரசிடம் எடுத்துச் சென்றுள்ளது. அதில் சிலவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தங்களின் முயற்சியால் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மேலும் தனியார் நிலங்களிலும் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், தரமான எம்சாண்ட் மணலை பயன்படுத்துவதற்கு அரசு ஊக்குவிக்க வேண்டும்.

தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசிற்கு நன்றி கூறும் விதமாகவும், தங்களது கோரிக்கைகளை எதிர்பார்ப்புகளை வலியுறுத்தும் வகையிலும், அமைப்பின் கோவை மாவட்ட மாநாடு வருகின்ற 12ம் தேதி கொடிசியா அரங்கில் நடத்தப்படவுள்ளது. அதில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கட்டுமானம், மனைத்தொழில் சார்ந்தவர் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட இத்தொழில் சார்ந்த அமைப்பின் பிரதிநிதிகள் என சுமார் 5000 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் இத்தொழிற்ச் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளோம். மலை மற்றும் மலைசார்ந்த இடங்களில் பல விஷயங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தொழிலுக்கு அத்தியாவசியமானவற்றை முடக்குகின்ற அளவில் நீதிமன்றம் சில உத்தரவுகளை போட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலையும் தொழிலையும் பாதிக்காத வண்ணம் தொழில் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சிலர் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூட மணலை எடுப்பதற்கு விடாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்பது இந்த தொழிலை பாதிக்கக் கூடியது. லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதிக்கக் கூடியது.

அனைவருக்கும் இல்லம் என்ற இலக்கினை வைத்து ஒன்றிய அரசும், மாநில அரசும் செயல்பட்டு வரும் நிலையில், வீடு கட்டுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கி தர வேண்டும், வீடு கட்டுவதற்கு தேவையான மணல், செங்கல் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கான ஒரு மாற்றுத் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு பொன்.குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...