பாலினம், சாதி குறித்து இழிவாகப்பேசி டார்ச்சர் - கோவையில் ராஜினாமா கடிதம் கொடுத்த திருநங்கை காவலர்

கோவை மாநகர காவல்துறையில் பெண் காவல் ஆய்வாளர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மனரீதியாக டார்ச்சர் செய்வதால், தனது பணியை ராஜினாமா செய்யப் போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா காவல் ஆணையரிடம் கடிதம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர், ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.

அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், அவர் கோவைக்கு கடந்த 2020 ம் ஆண்டு மாற்றப்பட்டார். கோவை மாநகர காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக தற்போது பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில், திருநங்கை காவலர் நஸ்ரியா இன்று ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.



அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், காவல்துறையில் பணியில் சேர்ந்ததில் இருந்து, பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்பொழுது தங்களது பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை என்பவர், தனது பாலினம் குறித்தும், ஜாதி குறித்தும் இழிவாக பேசுவதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். எனவே தன்னால் இனி காவல்துறையில் பணியில் இருக்க முடியாது என தெரிவித்த திருநங்கை காவலர் நஸ்ரியா, வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், அந்த கடிதத்தை கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் நஸ்ரியாவை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அப்போது, திருநங்கை காவலர் நஸ்ரியா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு, புகாரை எழுத்து பூர்வமாக கொடுக்கும் படியும் காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா எழுத்து பூர்வமாக புகார் அளித்தார். இதனிடையே, திருநங்கை காவலர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர் சந்தீப் விசாரிப்பார் எனவும், அவர் தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...