ஆழியார் அணையில் தெரியும் ஆங்கிலேயர் காலத்து பாலம் - வியப்பில் சுற்றுலா பயணிகள்!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆழியார் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தையும், சாலையையும், சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் ஆங்கிலேயர் கால பாலம் வெளியில் தெரிவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் அதன் பிறகு எதிர்பார்த்தப்படி மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மழை பெய்யாததாலும், கோடை காலம் முன் கூட்டியே தொடங்கியதாலும், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் குறைந்ததால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மற்றும் வால்பாறை செல்வதற்கு போடப்பட்ட தார் சாலை வெளியே தெரிகிறது.

தற்போது நீர்மட்டம் சரிவால், ஆங்கிலேயர் காலத்து பாலம் மற்றும் தார் சாலை வெளியே தெரிகின்றன. 100 ஆண்டுகள் கடந்தும் பாலமும், தார் சாலையும் இன்னும் அப்படியே காட்சி அளிக்கின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் நின்று கண்டு ரசித்து செல்கின்றனர்.

ஆழியாறு அணை கட்டுவதற்கு முன் மலை பகுதியான வால்பாறை செல்வதற்கு 1897-ம் ஆண்டு சாலை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கரடு முரடான மலைப்பாதையில் சாலை அமைக்க, லோம் என்பவரை அப்போதைய ஆங்கிலேய அரசு நியமித்தது.

அதனைத்தொடர்ந்து 1903-ம் ஆண்டு சாலை பணிகள் முடிந்ததும், சென்னை மாகாண கவர்னர் லார்ட் ஆம்பிள் அந்த சாலையை திறந்து வைத்தார். ஆழியாறில் இருந்து பாரளை வழியாக சிறுகுன்றாவுக்கு சாலை அமைக்கப்பட்டது.

அணை கட்டுவதற்கு முன் இந்த வழித்தடத்தில் மழைக் காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

இந்த பாதையை வால்பாறைக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாடு சுதந்திரம் பெற்ற பின், காமராஜர் ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பகுதி பாசனம் பெறும் வகையில் அணையை கட்ட திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1962-ம் ஆண்டு அணை கட்டப்பட்டது.

அணை பகுதியில் ஒரு சில கிராமங்களும், வால்பாறை செல்லும் சாலையும் இருந்தது. இதையடுத்து வால்பாறை செல்ல மாற்று வழிப்பாதை அமைக்கப்பட்டது. மேலும் அங்கு குடியிருந்த மக்களுக்கும் மாற்று இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆழியாறு அணை நிரம்பினால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் தண்ணீரில், மூழ்கி விடும். நீர்மட்டம் குறையும் போது, ஆங்கிலேயர் காலத்து பாலம், சாலை வெளியே தெரியும்.

தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதால், வெளியில் தெரியும் பாலத்தையும், சாலையையும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...