அதிக கட்டணம்: கோவை - சிங்கப்பூர் விமானத்தில் சரக்கு போக்குவரத்து பாதிப்பு!

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் சரக்கு கையாள்வதற்கான கட்டணம் கிலோவுக்கு ரூ.130 வசூலிக்கப்படுவதால், குறைவான சரக்குகளே கையாளப்படுவதாகவும், கட்டணம் குறைவாக உள்ள திருச்சி-ரூ.100 மற்றும் கொச்சின்-ரூ.70 விமான நிலையங்களில் இருந்து அதிகளவு சரக்குகள் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் சரக்குகள் கையாள்தற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் சரக்குகள் கையாளப்படுவது குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானத்தில், சரக்குகள் கையாள அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் மிக குறைந்த அளவே சரக்குகள் கையாளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும்.

தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில் சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவே கையாளப்படுகின்றன. திருச்சி, கொச்சின் விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் அதிக கட்டணம் வசூலிப்பது தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையிலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆனால் சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்படும் போதும் வாரம்தோறும் அதிகபட்சமாக 3 டன், மேலும், ஒரு சில வாரங்களில் அதற்கு குறைவாகவே சரக்குகள் கையாளப்படுகின்றன.

உதாரணமாக கோவையிலிருந்து ஒரு கிலோ சரக்கு கையாள ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் ரூ.100 மற்றும் கொச்சினில் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவு சரக்குகள் கையாளப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் அளவை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் பிரத்யேக அலுவலகத்தை திறக்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அலுவலகம் திறக்கப்பட்ட பின் கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு பொறியியல் துறை சார்ந்த மற்றும் உணவு பொருட்கள் உள்ளடக்கிய பல்வேறு சரக்குகள் கையாள தற்போது விதிக்கப்படும் கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...