கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை..! - அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அழகு சாதன பொருட்கள் அறிமுக விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது 198 என்ற அளவில் உள்ளது. தனிமனித பரவலாக மட்டுமே உள்ளது. சமூக பரவலாக மாறவில்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.



சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது சமூக பரவலாக மாறவில்லை. மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதன பொருட்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏடி கூந்தல் தைலம், மூலிகை ஷாம்பு, மூலிகை கூந்தல் பொடி, மூலிகை முகப்பொலிவு பொடி, கூந்தல் தைலம் ப்ளஸ், மூலிகை சோப் (பசுமை & வெண்மை) உள்ளிட்ட பொருள்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் சார்பில் 11 வகையான அழகு சாதன பொருட்கள் வரும் நிதி ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்று சென்ற நிதி நிலை அறிக்கையில் சொல்லி இருந்தோம்.

11 பொருட்களில் முதற்கட்டமாக 6 வகையான பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவை இயற்கை முறையை கொண்டு தயாரிக்கப்படுவதால் எந்தவித பின் விளைவுகளும் இருக்காது. டாம்ப்கால் லாபம் ஈட்டும் அமைப்பாக உள்ளது.

மூலிகை பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த அழகு சாதன பொருட்கள் எந்த பிரச்சினையும் இல்லாதவையாக இருக்கும். தனியார் கம்பெனிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் இந்த பொருட்களை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.

அரசு சார்பில் தயாரிக்கப்படும் இவை கூடுதல் பாதுகாப்பானது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் ஆசையை தூண்டி கூடுதல் விலை கொடுத்து வருகிறது. நானே அதற்கு ஒரு உதாரணம் 1975 ஆம் ஆண்டுகளில் அழகு சாதன பொருள் கண்டு மயங்காதவர் இருக்க முடியாது. அந்த இளைய சமுதாயத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.

தொடர்ந்து 48 ஆண்டுகளாக அதனை காலையும் மாலையும் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இன்று வரை சிவப்பாக மாறியதாக தெரியவில்லை. இன்னும் கூடுதல் கருப்பாக தான் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், ஏன் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று கேட்கலாம். தொடர்ந்து பயன்படுத்தியதால் அதை செய்யவில்லை என்றால் முகத்தில் முகப்பருகள் வந்துவிடுகின்றன.

இந்த டாம்ப்கால் அழகு சாதன பொருட்கள் அழகை தருகிறதோ இல்லையோ நிச்சயம் பக்க விளைவுகள் தராது என்று உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்கள சந்தித்த அமைச்சர், மா.சுப்பிரமணியம் பேசியதாவது, 175 வகையான சித்தா, ஆயுர்வேதா , யுனானி மருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மூலிகை சன் ஸ்கிரீன், செறிவூட்டப்பட்ட மூலிகை தைலம், ஹேர் டை உள்ளிட்டவை விரைவில் கொண்டு வரப்படும். 4 கோடி மதிப்பீட்டில் 11 வகையான மருந்துகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்று குறித்து பேசியவர், நேற்று இந்திய அளவில் 3000 பேருக்கு மேல் நோய் தொற்று பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 198 என்ற அளவில் பாதிப்பு உயர்ந்துள்ளது. ஓமிக்கிரானின் உருமாற்றம் அடைந்த XBB தொற்று பரவி வருகிறது. ஒன்றிய அரசு சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தது.

தமிழகத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி கடந்த 1 ஆம் தேதியில் இருந்து அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பொதுமுடக்க காலகட்டங்களில் பொது சுகாதாரத்துறை சார்பில் விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அடிக்கடி கை கழுவுவது, தனிமனித இடைவெளி, உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் அவை திரும்ப பெறப்படவில்லை.

ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு முன்பு இருந்து சுற்றுப்புறத்தில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவார்கள். காவல் துறையினர் அபராதம் விதித்து தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. முகக்கவசம் அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம்மை காத்துக் கொள்ள நல்ல வழி முக கவசம் போடுவது அதனை பின்பற்றுங்கள்.

கொரோனா தொற்று சமூக பாதிப்பாக மாறவில்லை தனிமனித பாதிப்பு தான் இப்போது உள்ளது. குடும்பம் முழுக்க பாதிக்கப்படுவது இல்லை. தொற்று பாதிப்பு உள்ளவர்களும் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டிய சூழல் எதுவும் ஏற்படவில்லை அதனால் பயம் கொள்ள தேவையில்லை.

வரும் 10 மற்றும் 11 தேதிகளில் ஒன்றிய அரசு சார்பில் மருத்துவகட்டமைப்பு தயாராக இருக்கிறதா என்று ஒரு திட்டத்தை தொடங்க சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...