முதுமலையில் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 22 கிலோ மீட்டர் சவாரி சென்ற பிரதமர் மோடி முதுமலை வளர்ப்பு யானைகளை பார்வையிட்டதுடன், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர் ஆவணப்படத்தில் நடித்த ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் பொம்மன், பெள்ளி தம்பதியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



நீலகிரி: பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்த பிரதமர் சபாரி செய்ததுடன் ஆஸ்கார் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு வந்தார். மைசூருவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி நேற்று இரவு தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை 6.20 மணியளவில் ஓட்டலில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்று ஹெலிகாப்டர் மூலமாக அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமன ஹள்ளிக்கு சென்றார்.



பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி வனப்பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் சவாரி சென்று வனவிலங்களை பார்வையிட்டார்.



இதை தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.



வாகன சவாரியை முடித்து கொண்ட பின்னர் சுமார் 10.20 மணிக்கு கக்கநல்லா சோதனை சாவடி வழியாக சாலை மார்க்கமாக முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட்டார்.



அங்கு பெண் யானைக்கு கரும்பு அளித்த அவர், மூத்த யானை பாகன்களான கிருமாறன், தேவராஜ், குள்ளன் ஆகியோரிடம் காட்டு யானைகளை பிடிப்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் முதுமலையில் T23 புலியை உயிருடன் பிடிக்க உதவியாக இருந்த முதுமலையை சேர்ந்த மீன்காளன், மாதன் உள்ளிட்ட 3 பழங்குடியின வனதுறை ஊழியர்களையும் சந்தித்து பேசினார்.



அதனை தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்' ஆவண படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும், ரகு, பொம்மி யானை குட்டிகளையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து முதுமலை தெப்பகாட்டில் இருந்து சாலை மார்கமாக மசினகுடி வந்த அவர், பஜார் பகுதியில் கூடியிருந்த கட்சி தொண்டர்களை பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கி கைகளை அசைத்து உற்சாகபடுத்தினார்.



அதே போல ஹெலிகாப்டர் தளத்தில் கூடியிருந்த பொதுமக்களின் அருகே நடந்து சென்று கைகளை அசைத்தார்.



பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...