அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் - மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கை!

திமுகவினர் குறித்து சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக 48 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், 500 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் திமுகவினரின் சொத்து பட்டியல் மற்றும் முதல்வர் ஸ்டாலின் மீதான ஊழல் குற்றசாட்டுகளை வெளியிட்டார். அதனடிப்படையில் முதல் பகுதி வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை, விரைவில் 2ம் பாகம் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை என்று கூறினார். மேலும், அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் அவர் ஐபிஎஸ் எப்படி ஆனார் என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக அண்ணாமலை ''திமுக சொத்து பட்டியல் தொடர்பாக வரும் வியாழக்கிழமை சிபிஐயில் புகார் அளிக்கவுள்ளதாக கூறினார். மேலும், சொத்து பட்டியல் குறித்து திமுகவினர் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல, அவர் தந்தையே வந்தாலும் சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், திமுக மீது வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு 48 மணி நேரத்துக்குள் அண்ணாமலை நஷ்ட ஈடாக 500 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும்.

குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'DMK Files' என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், திமுக கட்சி மீது கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

திமுகவினருக்குச் சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ. 3474.18 கோடி என்றும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ. 34,184.71 கோடி என்றும் காட்டியிருப்பது பொய்யான தகவல். திமுகவின் நிர்வாகியாக இருக்கும் ஒருவரின் சொத்துக்கள் திமுகவின் சொத்துக்களாக ஆகிவிட முடியாது.

திமுக மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பிலும் நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், அண்ணாமலையின் பொய்யான, தவறான குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வீடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக 500 கோடி ரூபாய் எங்களது கட்சிக்காரருக்கு கொடுக்க வேண்டும்.

அந்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அவர் செலுத்த விரும்புகிறார். இந்த தகவலை பெற்ற 48 மணி நேரத்துக்குள் இதை செய்யாவிட்டால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...