அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது.


அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கவும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்து நாட்களில் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது நாளையோடு முடிவடையுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், ஆணையர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில கட்சியாக உள்ள அதிமுகவிற்கு குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அதிமுக சார்பில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று அதிமுக சார்பில் கர்நாடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கை அதிமுக பொதுச்செயலாளருக்கும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டுமே தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது.

இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...