திருமண மண்டபங்களில் மதுவிற்கு அனுமதி இல்லை..! - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழகத்தில் திருமண மண்டபங்களில் மது அருந்துவதற்கான அனுமதி ஒருபோதும் வழங்கப்படமாட்டாது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது மட்டும், அந்த விளையாட்டு போட்டி நடைபெறுகின்ற இடங்களில் மட்டும் மது பயன்படுத்த அனுமதிகள் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச தரத்திலான கிரிக்கெட் (IPL) உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றபோது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை பின்பற்றுகின்ற வகையில் அந்த விளையாட்டு போட்டி நடைபெறுகின்ற இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கக்கூடிய வகையில் மது பயன்படுத்தக்கூடிய அனுமதிகள் வழங்கப்படுகிறது.

இன்று பல்வேறு செய்திகள் வருவதைப் போல திருமண மண்டபங்களில் மற்ற நிகழ்ச்சிகளில் அதுபோன்ற அனுமதி, தமிழ்நாட்டில் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த திருமண நிகழ்ச்சிகளுக்கும் திருமண மண்டபங்களுக்கும் ஏனைய நிகழ்ச்சிகளுக்கும் ஒருபோதும் மதுபானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் அரசு அனுமதி வழங்காது.

சர்வதேச தரத்திலான நிகழ்ச்சிகளான உலக முதலீட்டாளர்கள் மாநாடு அல்லது சர்வதேச அளவிலான நிகழ்ச்சி நடைபெறுகின்ற பொழுது மட்டும் சிறப்பு அனுமதிகள் வழங்கப்படுகிறது.

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்று சொன்னால், இந்தியாவில் பிற மாவட்டங்களில் பின்பற்றப்படக்கூடிய நடவடிக்கைகள், இங்கும் பின்பற்றப்பட வேண்டும். அதற்கான அனுமதிகளும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உடைய உச்சபட்ச மின்தேவை என்பது வரலாறு காணாத அளவிற்கு 19 ஆயிரம் மெகாவாட்டை கடந்து மின் நுகர்வு வந்துள்ளது. முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு, குறைந்த அளவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த டெண்டர் மூலமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்த மூன்று மாதத்தில் மட்டும் 1312 கோடி ரூபாய் சேமிப்பு கிடைத்துள்ளது. இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் அதனை சமாளிப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது. ஒரு சிலர் அரசின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக பொதுவான ஒரு கருத்துக்களை பரப்புகிறார்கள்.

எனவே சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பொழுது தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். 94987 94987 என்ற எண்ணில் தகவலை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, ஜி ஸ்கொயரில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறித்த அண்ணாமலை கருத்துக் குறித்து கேள்விக்கு எழுப்பியதற்கு பதில் அளித்த அமைச்சர், ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என சொன்ன வார்த்தைக்கும் சொத்து பட்டியலை வெளியிட்டதற்கும் வித்தியாசம் உள்ளது. அனைவரது சொத்து பட்டியலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய சொத்து என்ன என்பதையும் நான் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளேன்.

அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் விடுபட்டு இருந்தாலோ ஆட்சேபனை தெரிவித்து இருக்கலாம் அல்லது அதன் பிறகு வழக்கு தாக்கல் செய்திருக்கலாம்.

அதை விட்டுவிட்டு ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறிவிட்டு எந்த ஆதாரமும் அடிப்படை தன்மையும் இல்லாமல் குறைந்தபட்ச அறிவு கூட மண்டையில் இல்லாமல் இதனை வெளியிடுகிறேன் என சொல்லுவது,

இதெல்லாம் என்ன? இரண்டு வார்த்தைகளுக்கும்( சொத்து பட்டியல், ஊழல் பட்டியல்) என்ன வித்தியாசம் என்பதை படித்து தெரிந்து கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

சிலர் களத்தில் நின்று இயக்கத்தை வளர்க்க முயற்சி செய்வார்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைப்பவர். நாங்கள் அவர் வழியில் நின்று பணியாற்றி வருகிறோம். சிலர் உங்கள் மூலமாக (ஊடகங்கள் மூலமாக) விளம்பரத்தை தேடுவார்கள், அவர்கள் அளிக்கின்ற பேட்டியை எடுத்து அவர்களுக்கு தகுந்தாற்போல் எடிட்டிங் செய்து பயன்படுத்தி கொள்வார்கள்.

நான் கோவையில் பிஜேபியினுடைய உறுப்பினர் எண்ணிக்கை என்ன? என்று கேட்டிருந்தேன். எனவே உறுப்பினரின் எண்ணிக்கை என்ன? கட்சியின் நிலைமை என்ன? என்பதை கூறிவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, 12 மணி நேர வேலை குறித்து இன்று மாலை அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதற்கு பிறகு அதற்கான முடிவுகள் எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அது சரியா தவறா என ஆராய்ந்து பதிவிட வேண்டும். அந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. 

சென்னைக்கு இணையாக கோவைக்கான வளர்ச்சிகளை தருவதில் முதலமைச்சர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இங்கு ஒரு எம்எல்ஏகூட ஆளுங்கட்சி இல்லை என்பதால் எவ்வித திட்டங்களையும் நிறுத்தவில்லை. எனவே, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் பாராமல் வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். எனவே அரசு குறித்து தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர்மீது நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என அண்ணாமலையை சுட்டிக்காட்டிய அமைச்சர், உண்மையிலேயே மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பவர்களுக்கு மக்களின் தேவைகளையும் கருத்துக்களையும் அரசருக்கு முன்வைக்கலாம். அது ஒரு ஆக்கபூர்வமான செய்தி. அண்ணாமலை ஒரு கோமாளி. எனவே அவர் சுமத்துகின்ற ஒரு கருத்துக்களுக்கு, செய்தியாளர்களையும் சந்திப்பதில்லை.

நான் ரபேல் வாட்ச் பில்லை தாருங்கள் என்று தான் கேட்டேன் நான் என்ன துண்டு சீட்டையா கேட்டேன். அவர் வெளியிட்டது என்ன பில்லா?. நாம் வாங்கிய செல்போன் வாட்ச் இவையெல்லாம் எங்கு வாங்கினோம் என்று மறந்து விடுமா? இதையெல்லாம் நான் கேட்ட மறுநாளே இவரிடம் இருந்துதான் வாங்கி இருக்கிறேன் எனக் கூறியிருந்தால் ஏற்புடையதாக இருக்கும்.

நான் ரபேல் வாட்ச் பில்லை தாருங்கள் என்று தான் கேட்டேன் நான் என்ன துண்டு சீட்டையா கேட்டேன். அவர் வெளியிட்டது என்ன பில்லா?. நாம் வாங்கிய செல்போன் வாட்ச் இவையெல்லாம் எங்கு வாங்கினோம் என்று மறந்து விடுமா? இதையெல்லாம் நான் கேட்ட மறுநாளே இவரிடம் இருந்துதான் வாங்கி இருக்கிறேன் எனக் கூறியிருந்தால் ஏற்புடையதாக இருக்கும்.

மூன்றரை லட்சம் ரூபாய் வாட்ச்சை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு தருவது என்பது எனக்கு புரியவில்லை. அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு அதனை கம்மியான விலைக்கு கொடுப்பார்களா? ஒரு பொய்யை மறைப்பதற்கு ஓர் ஆயிரம் பொய்களை சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒருபோதும் அவரது எண்ணம் எடுபடாது. ஒருபோதும் அவரது எண்ணம் பலிக்காது. எனவே இந்த உண்மைக்கு மாறான பொய் குற்றச்சாட்டுகள் ஒருபோதும் எடுபடாது.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...