கோவையில் இருவேறு கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை - மருதமலை சாலை முல்லை நகர் அருகே கருப்பராயன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல், தில்லை நகர் விநாயகர் கோவிலில் பித்தளை பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே இருவேறு கோவில்களில் நிகழ்ந்த கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - மருதமலை சாலை முல்லை நகர் அருகே கருப்பராயன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் இக்கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் கோவிந்தராஜ் என்பவர் உள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலில் ஏதோ? உடைப்பது போல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு பாதுகாவலர் கோவிந்தராஜ் கோவில் அருகே சென்று பார்த்தார். அப்போது கோவில் முன்பு உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதே சமயத்தில் கோவில் பூசாரி கோவில் நடை திறப்பதற்காக வந்துள்ளார். அவரிடம் நடந்ததை கோவிந்தராஜ் கூறிய நிலையில், இருவரும் வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கோவில் உண்டியலை உடைத்து துணியில் பணத்தை சுற்றி எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் உண்டியலை உடைக்க உலி மற்றும் கம்பிகளை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது.

இதனால் கோவில் மதில் சுவர் வரையில் பணம் மற்றும் சில்லறை காசுகள் சிதறி கிடந்தது. இதையடுத்து போலீசார் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை நியூ தில்லை நகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் கோவிலுக்குள் புகுந்து பித்தளை விளக்கு மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடியது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்கள் தான் கருப்பராயன் கோவிலில் உள்ள உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...