கோவையில் பனை மரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயங்கிய நபர் - கிரேன் உதவியுடன் மீட்பு!

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 100 அடி உயரமுள்ள பனை மரத்தின் மீது ஏறி மது அருந்திய லட்சுமணன் என்ற நபர், அங்கேயே மயங்கிய நிலையில், போலீசார், கிரேன் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டனர்.


கோவை: சின்னாம்பாளையம் பகுதியில் பனைமரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயக்கமடைந்த நபரை போலீசார் கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 100 அடி உயரமுள்ள பனை மரத்தின் மீது ஏறிய ஒருவர் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பனை மரத்து உச்சியில் அமர்ந்து மது அருந்திய ஆசாமி தான் கொண்டு சென்ற ஸ்நாக்ஸை சாப்பிட்டவுடன் போதை தலைக்கேறிய நிலையில் பனை மரத்திலேயே படுத்து சாய்ந்து உறங்கி விட்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கோட்டூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த போலீசார் கூச்சலிட்டு சத்தம் போட்டும் அந்த நபர் காதில் விழவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபரை எழுப்ப முடியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர்.



பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும் கீழே வலை விரித்தும் அந்த நபரை மீட்க முயன்றும் பயனளிக்கவில்லை.



இதனை தொடர்ந்து, இரும்புக்கூண்டு பொருத்தப்பட்ட கிரேன் கொண்டு வரப்பட்டு மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் மது போதையில் பனை மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபரை லாவகமாக தூக்கி இரும்பு கூண்டில் வைத்து கீழே கொண்டு வந்தனர்.

சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடிய தீயணைப்பு வீரர்கள் அந்த ஆசாமியை கீழே இறக்கியவுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கைகளை தட்டி தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.



பின்பு போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை செம்மனாமதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் என்பதும் மது அருந்திவிட்டு மரம் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

100 அடி உயரமுள்ள பனை மரத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு உறங்கிய நபரால் வால்பாறை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...