உதகையில் கோடை சீசன் தொடக்கம் - மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த சுற்றுலா தலங்கள்..!

நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நுழைவு வாயிலில் டிக்கெட்டுகளை பெற கூட்டம் அலைமோதியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.


நீலிகிரி: கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறும். இந்த சீசன் சமயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.

அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் சமவெளி பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது.

இந்த நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவு வாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

அங்குள்ள கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ரோஜா பூங்காவில் கண்காட்சி தொடங்கியது. இதில் பல வண்ண ரோஜா மலர்களால் ஈபிள் டவர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்து, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து, 2-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

உதகை - கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகு, அதிவேக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் உதகை படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.

இது தவிர பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், ரோஜா பூங்காவில் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...