10ஆம் வகுப்பில் பெயிலாகி படிச்ச நானே கலெக்டர் ஆகிட்டேன் உன்னால முடியாதா? - மாணவருக்கு ஊக்கமளித்த திருப்பூர் ஆட்சியர்!

பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அங்கு, பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற மாணவரிடம் 10ஆம் வகுப்பில் பெயிலாகி படிச்ச நானே கலெக்டர் ஆகிட்டேன் உன்னால முடியாதா? என்றும், நன்றாக படித்து தேர்ச்சி அடைய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று தற்கொலைக்கு முயன்ற மாணவர் ஒருவருக்கு ஊக்கமளிக்கும் அறிவுரைகளை வழங்கினார்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் தவித்து வருவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பகுதி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா என்பது குறித்தும் அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அனீஸ் என்ற பள்ளி மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அந்த மாணவனின் உடல் நலம் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். 



பின்னர் அந்த மாணவனிடம் "10th பெயில் ஆகி படித்த நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன். உன்னால முடியாதா? இன்னும் நல்லா படிச்சி 12th ல நல்ல மார்க் எடுக்கணும். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு அலைபேசியில் அழைத்து கண்டிப்பாக சொல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். 



மேலும் நானும் வாலிபால் பிளேயர் தான் எனவும் நன்றாக விளையாடு எனவும் உன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். எதை பற்றியும் கவலை படாதே! உறுதியோடு படி என தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு மன வலிமை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.



தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் கழிப்பிட வசதி இல்லாததால் பேருந்து நிலையம் வரை நோயாளிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், சித்தா பிரிவு அறை இருக்கும் இடத்திற்கு வழிகாட்டி பதாகைகள் வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...