சின்னதடாகம் அருகே பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்!

கோவை சின்னதடாகம் அருகே டெய்லர் கடை நடத்தி வந்த நபர், தன்னுடன் பழகி வந்த சித்ரா என்ற பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று, திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



கோவை: கோவை சின்னதடாகம் அருகே பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற நபர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா (35). இவர் கோவை அடுத்த வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் (39) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக, கோவை சின்னத்தடாகம் மாரியம்மன் கோவில் வீதியில் வீடு எடுத்து தங்கி ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களாக அவர்களது வீடு பூட்டியிருந்துள்ளது. 

இந்நிலையில் மதுரைவீரன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சித்ராவை கொலை செய்ததாக சரணடைந்துள்ளார். இதையடுத்து திண்டுக்கல் போலீஸார் கோவை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 

தடாகம் போலீஸார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சித்ரா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சித்ராவின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து, மதுரைவீரனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சித்ரா கடந்த 4 மாதங்களாக தன்னுடன் வசித்து வருவதாகவும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். 

இதனால், கடந்த 29 ஆம் தேதி இருவரும் குடிபோதையில் வீட்டில் இருந்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் சித்ராவை மதுரைவீரன் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சரணடைந்த மதுரைவீரன் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...