கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் - திமுகவின் வாக்கால், பாஜக வெற்றி!

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், மொத்தம் 17 வாக்குகளில் திமுக உறுப்பினர்கள் வாக்களித்ததால் பாஜகவை சேர்ந்த கோபால்சாமி என்பவர் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



கோவை: கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக உறுப்பினர்கள் வாக்களித்தன் மூலம் 15 வாக்குகள் பெற்று பாஜக உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார். 

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த தேர்தலில் 100 மாநகராட்சி கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளில் உள்ள 196 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 511 கவுன்சிலர்கள் என மொத்தம் 824 உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வாக்குசாவடியில் வாக்களித்தனர்.

ஊரக உள்ளாட்சியிலிருந்து 5 மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 9 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். அதிமுக, திமுகவில் தலா ஏழு, பாஜகவில் இரண்டு, கொ.ம.தே.க வில் ஒருவர் என மொத்தம் 17 மாவட்ட கவுன்சிலர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர்.



பாஜக சார்பில் போட்டியிட்ட கோபால்சாமி என்பவர் 15 வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சியாக அதிமுக இருந்தாலும், பாஜக இரண்டு, அதிமுக 7 என மொத்தம் 9 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்க முடியும். ஆனால் திமுகவில் ஐந்து பேரும், கொமதேகவில் ஒருவரும் வாக்களித்ததால் பாஜகவை சேர்ந்த கோபால்சாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுகவும் பாஜகவும் எதிரும் புதிருமான கட்சியாக இருந்தாலும், திமுகவினர் வாக்களித்து, பாஜகவினர் அமோக வெற்றி பெற்றிருப்பது, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் ராஜன் மட்டுமே, 9 வாக்குகள் பெற்று திட்டப்பணிக்குழு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், கந்தசாமி, சக்திவேல் பாஜகவின் ஆதரவோடு, தலா ஓன்பது வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். நான்கு வேட்பாளர்கள் எட்டு வாக்குக்கள் பெற்றதால், வெற்றியை அறிவிக்க குலுக்கல் முறையில் நான்கு வேட்பாளர்களின் பெயர்களும் போடப்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த பிரதீப் பெயர் வந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

ஐந்து இடங்களில் மூன்றில் அதிமுகவும், பாஜக, திமுக தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 28ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...