கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி - பரபரப்பு!

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் போது, சுவர் இடிந்து விழுந்ததில் ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், துணை மேயர் மற்றும் துணை காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை குனியமுத்தூர் அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.



இந்த கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் பொழுது சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் சம்பவ இடத்தில் கோவை தெற்கு காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



அதனை தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,



சுற்றுச்சுவர் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்துள்ளது. ஐந்து பேர் அங்கு வேலை செய்து வந்ததில் நான்கு பேர் உயிரிழந்து விட்டனர், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஒருவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர், படுகாயம் அடைந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது.

கல்லூரியை சுற்றியுள்ள அனைத்து சுவர்களுமே இந்த நிலைமையில் தான் உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் பொழுது நானும் செயலாளரும் இங்கு வந்து பார்த்தோம். அப்பொழுதே மழை நீர் முழங்கால் அளவிற்கு இருந்தது.

ஏற்கனவே இருமுறை எச்சரித்தும் கல்லூரி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் இந்த நிலைமையில் தான் உள்ளது. சுவர் இடிந்து விழுந்ததற்கு மாநகராட்சி பொறுப்பேற்க முடியாது. பலமுறை மாநகராட்சி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றுச்சுவர் கம்பி எதுவுமில்லாமல் வெறும் கற்களை மட்டுமே வைத்து கட்டிக்கொண்டு சென்று உள்ளார்கள். பழனியப்பா நகரில் உள்ள ஓடையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் கட்டி உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் சிவகுமார் கூறியதாவது,

சுற்றுச்சுவர் உயரமாக இருந்தது தான் இந்த விபத்திற்கு காரணம். கல்லூரியை சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்கு காம்பவுண்ட் சுவர்கள் உள்ளன. அவை அனைத்துமே உயரமாகத் தான் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...