விவசாயிகளிடம் இருந்து தேங்காயை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்!

தாராபுரம் அடுத்த சந்திராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், விவசாயிகளிடம் இருந்து தேங்காயை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த சந்திராபுரத்தில் நடைபெற்ற உழவர் தியாகிகள் தின மாநாட்டில், விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சந்திராபுரத்தில், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய உழவர் போராட்டத்தில், உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் வகையிலும், உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற்றது.



உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். விவசாயிகளின் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு இந்த மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதனையடுத்து, செய்தியாளர்களிடம் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து பேசியதாவது,



தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஒரு காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய். ஆனால் உழைத்து உற்பத்தி செய்த தேங்காய் 8 ரூபாய்.தேங்காயை விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். எனவே அந்த முழுமையான கோரிக்கையை இந்த மாநாட்டிலே எடுத்து இருக்கிறோம்.

மேலும் பால், வெங்காயம், மக்காச்சோளம் போன்ற வேளாண் உற்பத்தி பொருள் அனைத்திற்கும் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தி இருக்கிறோம்.

ஆனைமலை திட்டத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும். உடனடியாக அதற்கு நிதி ஒதுக்க அறிவிப்பு செய்ய வேண்டும். கர்நாடக மந்திரி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டேன் என்று சொல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அந்த தண்ணீரை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நிலம் இழப்பீடு தொகையை பொதுப்பணித்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, மாநில பொது செயலாளர் திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணி தலைவர் ராஜ ரீகா, மாநில செயலாளர் ஈஸ்வரன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் கே. ஈஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் சங்கீத பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...