மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா மாநாடு குறித்து கோவை மாவட்ட அதிமுகவினர் ஆலோசனை!

கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், புறநகர், தெற்கு, வடக்கு மாநகர் மாவட்டம் சார்பில் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா மாநாடு குறித்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், புறநகர், தெற்கு, வடக்கு மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

அப்போது விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,



அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது. முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலினை இறக்கவே இந்த மாநாடு நடைபெறுகிறது.

மு.க.அழகிரி அதிமுக இனிமேல் கிடையாது, அழிக்க போரோம் என்று கூறியதை சுட்டிக்காட்டி, எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சியை அழிக்க முடியாது. தற்போது பொன்விழா கொண்டாட உள்ளது.

தமிழகத்தில் அதிகமான திட்டங்களை வழங்கியவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். அரசாங்க பணத்தை எடுத்து குடும்பமாக செம்மொழி மாநாட்டை நடத்தி கோவையை திமுக அழித்து சென்றார்கள். அதனை கண்டித்து 2010ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் மிகப்பெரிய ஆர்பாட்டமும், கோவையை தொடர்ந்து, திருச்சி, மதுரையில் நடந்த ஆர்பாட்டமே கோட்டைக்கு ஜெயலலிதா சென்றதற்கு காரணம்.

அதுபோன்று இப்போது மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. மதுரை மாநாடு முடிந்து எடப்பாடி கோட்டைக்கு செல்லும் சூழல் உள்ளது. அதிமுக ஆட்சியில் 20,000 போராட்டங்கள் நடத்தி திமுக சித்து வேலைகள் செய்தது.



முறைகேடு செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை, எதையும் செய்வதில்லை. விலைவாசி உயர்வுடன், மணல், கல் எதையும் எடுக்க முடிவதில்லை காரணம் அனைத்திலும் லஞ்சம். ஓராண்டில் 30,000 கோடி லஞ்சம் என அக்கட்சியின் நிதி அமைச்சராக இருந்தவர் சொன்னதுபோன்று தான்.

அதிமுக சென்னையை விட கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்தது. மெட்ரோ திட்டம் கூட அதிமுக அறிவித்தது தான். கோவை மாவட்டத்திற்கு 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை வழங்கியது அதிமுக அரசு. நியாயத்திற்கு புறம்பாக காவல்துறை அதிமுக மீது பொய் வழக்குபதிவு செய்கிறது.

எப்போது வேண்டுமானாலும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். எடப்பாடி பொதுச் செயலாளர் ஆன பிறகு இளைஞர்கள் அதிமுகவில் தான் படைப்படையாக சேர்கின்றனர்.

மாணவர் சமூகத்திற்கு அதிகமாக செய்தது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். ஜெயலலிதா வழியில் எடப்பாடி 7.5 சதவீத இட ஒதுக்கீடு உட்பட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தவர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவம் படிப்பதற்கு எடப்பாடி தான் காரணம் என்றவர், நீட் கொண்டு வந்தது திமுக தான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து என்றார்கள். ஆனால் மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். எடப்பாடியாருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மதுரை மாநாட்டிற்கு போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். குழு அமைத்து மதுரை மாநாட்டிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,



அதிமுக கோவை 3 மாவட்டம் சார்பாக ஒரு லட்சம் பேர் மதுரை மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளது. சில மாவட்டங்களுக்கு சென்றபோது, எழுச்சியை பார்த்தால் திமுக ஆட்சி போதும், எடப்பாடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்.

எந்த திட்டம் பார்த்தாலும் அதிமுக அறிவித்தது தான். 2.5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. மதுரை மாநாடு பிறகு, 40 தொகுதியும் அதிமுக வெல்லும். சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் செயலிழந்து முடங்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் கொரோனா வந்தபோது, ஒவ்வொரு மாவட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கண்காணித்து வந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...