ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு – 1000 மாணவர்கள் பெயர் பதிவு

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 1000 -க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் மாணவர்களும் பேராசிரியர்களும் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்ய தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டனர்.



கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் அரங்கேறியது. இதில் மருத்துவர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர்.



கொங்குநாட்டின் தனித்த அடையாளமான எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் இணைந்து நடத்திய உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு எஸ்.என்.ஆர். கலையரங்கில் 12.08.2023 (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில், எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி, தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்புச் செயலர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியாதவது,



நாம் வாழும் வாழ்க்கைச்சூழல் முன்பு இருந்த நிலையை விட முற்றிலும் மாறி இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு என்று அனைத்திலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளதால் இளம் வயதில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வருகிறோம். தற்போது மருத்துவத்துறை அதிவேகமாக வளர்ந்து வந்தாலும் கூட பெரிய தீர்வுகளை எட்ட முடியாத நிலையில் உள்ளோம். இதற்கு அடிப்படைக் காரணம் போதிய அளவு உடல் உறுப்பு தானம் இல்லாத நிலையே என்று குறிப்பிடலாம்.

இலட்சக்கணக்கோருக்கு உடல் உறுப்பு தேவை உள்ளது. ஆனால் இங்கு சில ஆயிரங்களில் மட்டுமே உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்குக் கிடைக்கின்றன. இது எண்ணிக்கை அளவில் பெரிய வேறுபாட்டில் உள்ளது. இதனை நாம் அனைவரும் புரிந்து கொண்டு வருமுன் காப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு தனி மனிதரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். வரும் தலைமுறைக்கு நல்வழியை ஏற்படுத்தித் தரவேண்டும்.

இவ்வாறு டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் அலைட் எல்த் சயின்ஸ் மாணவர்களின் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாடகம் அரங்கேறியது.



அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூசின் 1000-க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய பெயர்ப் பதிவு செய்துகொண்டனர்.

ஏற்கெனவே 2016 - இல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் சார்பில் 13206 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்த கின்னஸ் சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் டாக்டர் அசோகன் மற்றும் டாக்டர் முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினரால் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் பரதன் வரவேற்றார்.



சீறுநரக ஆலோசகர் டாக்டர் மது சங்கர் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூசின் அனைத்து கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 1000 – க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...