தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைப்பு - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


கோவை: தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களில் வசிக்கும் நடுத்தர, ஏழை மக்கள் கறவை மாடுகள் வளர்ப்பை நம்பியே உள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரமும் அதுவே. பெரும்பாலான மக்கள் ஆவினுக்கு தான் பால் வழங்கி வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சி அமைந்த பிறகு இரண்டாண்டுகளுக்கும் மேலாக, ஆவினுக்கான பால் வரத்து பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசின் செயலற்ற தன்மை, தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில், பால் முகவர்களுக்கு தினசரி விநியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் கடந்த 23ஆம் தேதி முதல் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வாய்மொழி உத்தரவு மூலம் இது கோவை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கோவை மாவட்ட மக்களுக்கு தேவையான பால் கிடைக்காமல் தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோவை ஒன்றியத்தில் இதுவரை தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வெறும் 96 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக, பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக திட்டமிட்டு, பால் தட்டுப்பாட்டை ஆவின் நிர்வாகம் ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்கவும், மக்களுக்கு ஆவின் பாலும், தயிர், வெண்ணெய், நெய், பன்னீர் போன்ற பால் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...