சனாதனத்தை ஆதரிப்போம் என்று சொன்னாலே தீண்டாமையை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் - தபெதிக!

சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியார் கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார் என்றும் அவர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.



கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.



இந்நிலையில் அந்த சாமியார் மீது சட்டரீதியான குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



இந்த புகார் மனு தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் வழங்கப்பட்டது.



இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன், அந்த சாமியார் மிகவும் ஆணவத்துடன் பேசி உள்ளது கொலை வெறி அறிவிப்பு. கொலையை தூண்டுவதற்கு சொல்லப்பட்ட செய்தி. கலவரத்தை உருவாக்கும் செய்தி. எனவே உடனடியாக அந்த சாமியார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி என்ன கருத்து கூறி இருக்கிறார் என்று விளக்கம் அளித்தாலும், அதனை அரசியலுக்கு தவறாக பயன்படுத்துகின்ற நோக்கத்தோடு அமித்ஷா உட்பட அகில இந்திய பாஜகவினர் தவறான பிரச்சாரத்தை உதயநிதி மீது செய்து வருகிறார்கள்.

சனாதனம் என்பது மூட நம்பிக்கையை பரப்புகிறது, பெண்களின் உரிமையை பறிக்கிறது, பெண்களை அடிமைப்படுத்துகிறது, சாதி வேறுபாடு வர்ணங்களை கற்பிக்கிறது, எனவே அப்படிப்பட்ட சனாதனம் வேண்டாம் என்ற கருத்தை தான் தெளிவாக உதயநிதி பதிவு செய்துள்ளார்.

வடநாட்டில் இது போன்ற அநாகரீகமான செயல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி இருக்கும் பொழுது நடைபெற்றது. கலைஞரின் தலைக்கு ஒரு கோடி ரூபாயை அப்போது ஒரு சாமியார் அறிவித்தார், ஆனால் அந்த சாமியார் கலைஞருக்கு முன்பே உயிரிழந்து விட்டார்.

சனாதனத்தை உதயநிதி புதிதாக விமர்சிக்கவில்லை, அம்பேத்கர் தொடங்கி அரசியல் சட்டமே சனாதனத்தின் படி பேசக்கூடாது எனவும் எழுதக்கூடாது எனவும் கூறுகின்ற நிலையில் சனாதனத்தை விமர்சிப்பதும் எதிர்ப்பதும் இந்தியாவில் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இன்று அதனை வன்மத்தோடு செய்வது தான் அந்த சாமியாரின் பண்பாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உதயநிதி மீது மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாமியாரின் மீது நாங்கள் புகார் மனு அளித்துள்ளோம். இன்று கோவையில் மட்டும் புகார் வழங்கப்பட்டுள்ள நிலையில் இனி அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து அளிக்கப்படும்.

இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்ட காரணத்தினால் அவர்களால் இது (சனாதனம்) கடுமையாக தூண்டப்படுகிறது. கடந்த காலங்களில் அம்பேத்கர், பெரியார் இதை எதிர்த்து போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தற்போது சனாதனத்தை தமிழ்நாட்டில் ஆளுநர் முதற்கொண்டு தூக்கி வைத்து பேசுவதன் காரணமாகத்தான் அதை எதிர்த்து பேச வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றார். சனாதனத்தை ஆதரிப்போம் என்று சொன்னாலே தீண்டாமையை ஆதரிக்கின்றோம் என்று அர்த்தம் பெண்களை அடிமைப்படுத்துவோம் என்று அர்த்தம்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை தர வேண்டாம் என்று சொல்லுவது சனாதனம். கல்வி மறுப்பை சரி என்று சொல்லுவது சனாதனம். சங்கராச்சாரியார் முன்பு எல்.முருகன் தரையில் தான் அமர வேண்டும் அதுதான் சனாதனம், சாமி ஊர்வலத்தில் கடவுள் சிலையை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் மற்றவர்கள் சுமந்து வர வேண்டும் என்பதுதான் சனாதனம். இவற்றை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்தியா கூட்டணியில் இருப்பவர்களே இது குறித்து கருத்துக்கள் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, இந்தியா கூட்டணி என்பது, அரசியலுக்காக மோடியின் மக்கள் விரோத செயல்களுக்காக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அவர்கள் இந்த கருத்திற்கு மாறுபடலாம். தமிழ்நாட்டில் பாஜகவை ஆதரிக்கும் அதிமுக கூட வடநாட்டில் சனாதனத்தை ஆதரிப்பது போல இங்கே ஆதரிக்க முடியாது அதைப் பற்றி ஆதரித்தும் பேச மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...