கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிம்முடு அஜித் குமார் (35), கார் விற்பனை பெயரில் பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்திலும் கார் விற்பனை செய்வதாகக் கூறி இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலக் குறைவு இருப்பதாக தெரிவித்ததால், கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காலில் ஏற்பட்ட காயம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடன் மேலும் மூன்று கைதிகளும் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த முன்தினம் இரவு சுமார் 7.30 மணியளவில், கைதிகள் வார்டுக்கும் மகளிர் சிகிச்சைப் பிரிவுக்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புப் பகுதியை ஒட்டியிருந்த கழிப்பறை பகுதியில் இருந்த துவாரத்தை பயன்படுத்தி பிம்முடு அஜித் குமார் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். முகத்தை துணியால் மூடியபடி மகளிர் வார்டு வழியாக மருத்துவமனையை விட்டு வெளியேறிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நள்ளிரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், தப்பியோடிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குள் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர். பின்னர், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை காவலில் எடுத்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பிம்முடு அஜித் குமார் நீண்ட நாட்களாக திட்டமிட்டு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் தப்பிச் செல்ல உதவியதாக கார் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் இரண்டாம் நிலை காவலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கைதி தப்பிய சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி, காவலர்கள் பாரதிதாசன் மற்றும் அசோக்குமார் ஆகிய மூன்று பேரை கோவை மாநகர காவல்துறை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கைதி தப்பிய சம்பவத்தில் காவல்துறையினரே சிக்கியிருப்பதும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...