திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 3 பேர் Group 1- தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்..!

தமிழ்நாட்டில் குரூப் 1-ல் தேர்வில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மூவர் தேர்வில் வெற்றி பெற்று, உதவி ஆட்சியர், வணிக வரித்துறை உதவி ஆணையர், துணைப் பதிவாளர் பதவிகளில்  பணியாற்ற உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை, கூட்டுறவு துறைகளில் பணியாற்றும் மூவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 1 நடத்திய தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர். சமீபத்தில் வெளியான முடிவுகளில், இவர்கள் மூவரும் உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளாக பதவி ஏற்க உள்ளனர். 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி(26). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, கடந்த 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித் தேர்வுக்கான படிப்பையும் கைவிடாது படித்து வந்த இவர்,இன்றைக்கு, தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-ம் இடம் பிடித்து அவர் பணிபுரிந்து வந்த கூட்டுறவுத் துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். 

இது குறித்து பேசிய சுபாஷினி, வேலைக்கு சென்று வந்த எஞ்சிய நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் தந்த ஊக்க்கமும், பயிற்சியும் எனக்கு பக்கபலமாக இருந்தன. இன்றைக்கு நான் வெற்றிப் பெற்றதை பார்த்து, என் தங்கையும் போட்டித் தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள், என்றார்.

அடுத்து, உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி வேளாண்மை படித்தவர். திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து, தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். 

தொடர்ந்து, குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். 

இது குறித்து பேசிய இந்திரா பிரியதர்ஷினி, “வேளாண்மை அலுவலராக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் பணியிடங்களுக்கு சென்றுவிட்டு வீட்டு திரும்பவே தாமதமாகும். ஆனாலும்., தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றிப் பெற்றுள்ளேன், என்றார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-ல் வெற்றிபெற்று, இளநிலை உதவியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர் தான்பிஎஸ்சி வேளாண்மை பட்டதாரியான நித்யா (26). அரசு வேலை கிடைத்துவிட்டது என அத்துடன் முயற்சியை கை விடாமல், தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவலராக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். 

தொடர்ந்து முயற்சித்து வந்த நித்யா,குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து இன்றைக்கு மாநிலத்தில் 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். 

“தமிழ்நாட்டில் தொகுதி 1-ல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 3 பேர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் நாங்கள் முயற்சிப்பதை நிறுத்தவில்லை. அதுவே,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1- வெற்றிக்கு மிக முக்கிய காரணம்", என்பதே மூவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...