கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவு திருவிழா - கலை நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

100 வகையான பஞ்சாப் உணவு வகைகள், 20க்கும் மேற்பட்ட சாலட் வகைகளான புளிக்கவைக்கப்பட்ட காய்கறி சாலட், வெங்காயத்துடன் கலந்த கொண்டைக்கடலை சாலட், மிளகாய் தக்காளி சாலட் உட்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து வகையான உணவுகளும் சமைத்து உணவுத்திருவிழாவில் பரிமாறப்பட்டது.



கோவை: கோவை பாலக்காடு புறவழிச்சாலையில் இயங்கி வருகின்ற ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், "கிச்சன் கார்னிவல் 2024" “பஞ்சாபி உணவுத் திருவிழா” என்ற பெயரில் பொது மக்களுக்கான உணவுத் திருவிழா நடைபெற்றது.



கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கல்லூரி வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு திருவிழா துவங்கி நடைபெற்றது. விவசாயமே பிரதானத் தொழிலாகக் கொண்ட மாநிலம் பஞ்சாப்.

ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு கதை கூறுவார்கள். பால், தேன், நெய், கோதுமை பொருள்கள், பருப்பு வகைகள் போன்ற விவசாயம் செழிக்கும் இடமாக பஞ்சாப் திகழ்கிறது. பஞ்சாபின் உணவு வகைகள் எளிமையாகவும், சுவையாகவும், நறுமணப் மசாலாப் பொருள்கள் சேர்த்து சமைத்த உணவாகவும் காணப்படுகிறது. இந்த உணவுத் திருவிழா பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாப் மக்களின் பாரம்பரியம், அவர்கள் அணியும் உடை, கலாச்சாரம் போன்றவற்றை மையமாக வைத்து நடத்தப்பெற்றது.



இந்த உணவுத் திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தின் 100 வகையான பஞ்சாப் உணவு வகைகள், 20க்கும் மேற்பட்ட சாலட் வகைகளான புளிக்கவைக்கப்பட்ட காய்கறி சாலட், வெங்காயத்துடன் கலந்த கொண்டைக்கடலை சாலட், மிளகாய் தக்காளி சாலட், பேபி கார்ன் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு சாலட், வெங்காயத்துடன் வேகவைத்த வேர்க்கடலை பச்சைமிளகாய், கொத்தமல்லி சாலட் போன்றவையும், பிரதான உணவுக்கு முன் வழங்கப்படும் சைவம் மற்றும் அசைவ சிறு உணவுகளான உருளைக்கிழங்கு தந்தூரி, சேனைக்கிழங்கு கபாப், வறுத்த சிக்கன், அங்காரா சிக்கன், பட்டியாலா தவா மீன் வறுவல் போன்றவையும், பஞ்சாப் மாநிலத்தில் விளைந்த கேரட், முள்ளங்கி, பூண்டு காளிஃபிளவர், எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாய், மாங்காய் போன்ற பொருட்களை வைத்து பஞ்சாபி சமையல் முறையில் தயாரிக்கப்பட்ட விதவிதமான ஊறுகாய் வகைகள், பஞ்சாப் சமையல் பொருள்களை சேர்த்து அரைத்த சட்னி வகைகளான கொத்தமல்லி சட்னி, தக்காளி சட்னி, நாட்டு பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் சட்னி, பீர்க்கங்காய் சட்னி, பஞ்சாபி கஜர் (கேரட்) கி அச்சார், ஐந்து வகை காய்கறிகளான முள்ளங்கி, பச்சைபட்டாணி, பச்சைமிளகாய், காளிஃபிளவர், கேரட்டுகளை வைத்து தயாரிக்கப்பட்ட அச்சார் (பஞ்ச் மிச்செலி வெஜ் அச்சார்) போன்றவையும், பிரதான பருப்பு வகை குழம்புகளான தால் மக்னி, பஞ்சாபி சாக் கிரேவி, ராஜ்மா மசாலா, அமிர்தசரி சோல் மசாலா, முளைகட்டிய பயிறு வகைகள், பஞ்சாபி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி மற்றும் அசைவ புலாவ், ரைத்தா வகைகளில் கார பூந்தி ரைத்தா, அண்ணாசிப்பழ ரைத்தா, சைவ மற்றும் அசைவ கிரேவி வகைகள் பஞ்சாபி ஸ்டைல் காளான் கிரேவி, பச்சைப்பட்டாணி கிரேவி, பைகன் (கத்தரிக்காய் கிரேவி) பாலக் சிக்கன் கிரேவி, பஞ்சாபி முறையில் செய்யப்பட்ட மீன் குழம்பு, பட்டர் சிக்கன் மசாலா, பஞ்சாப் பிரசித்திப்பெற்ற ரொட்டி வகைகளான மசாலா ரொட்டி, கடலை மாவு ரொட்டி, உருளைக்கிழங்கு ரொட்டி, பட்டர், நாண், தந்தூரி, சாட் வகைகளான பஞ்சாபி சமோசா, தயிர் வடை, ஆலு டிக்கி, பப்டி சாட், பானி பூரி வகைகள், இனிப்பு வகைகளில் பஞ்சாப் கோதுமை அல்வா, கேரட் மற்றும் பால் சேர்க்கப்பட்ட கஜ்ரேலா, பிர்னி, கீர் இனிப்பு வகைகள், பஞ்சாப் லட்டு வகைகள், ஹாட் ஜிலேபி, குல்பி வகைகள், போலி இனிப்பு ரொட்டி வகைகள், வெல்லம், வாழைப்பழம் மற்றும் பெருஞ்சீரக விதைகளை வைத்து செய்யப்பட்ட குல்குலா இனிப்பு வகைகள் போன்றவை சுவையுடன் பரிமாறப்பட்டது. ஹாட் ஜிலேபி, குல்பீ, தவா வெஜெடபிள்ஸ், போலி போன்ற உணவுகள் நேரடியாக சமைத்தும் பரிமாறப்பட்டது.

சுவையான உணவுகளை பொதுமக்கள், குழந்தைகள், உணவு ஆர்வலர்கள் 2000 நபர்கள் சுவைத்து உண்டனர்.



இந்த கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை மாணவர்கள் ஆடை அலங்கார அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகளை பிரதிபலிக்கும் விதமாக ஒய்யார நடைப்போட்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.



விடுமுறை நாளில் பொழுது பொக்கும் விதமாக கண்ணுக்கு இனிய அனைவரும் கண்டு களிக்கும் வண்ணம் நடனம், பாட்டு, குழந்தைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள் என பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த உணவுத்திருவிழா உணவளிப்பு அறிவியல் மற்றும் உணவக மேலாண்மை துறை மாணவர்களின் சமையல் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஊன்றுக் கோலாகவும் தொழில் முனைவோராக மாற்றும் விதத்திலும் கல்லூரி நிர்வாகம் இத்தகைய சிறப்பான ஏற்பாட்டை திறம்பட அமைத்துக் கொடுத்துள்ளது. கேட்ரிங் படிக்கும் மாணவர்கள் பஞ்சாப் உணவுகளை சமைத்தனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...